
அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சியில் பனை மரத்தின் கீழ் குழந்தை வரம் கேட்டு பிரார்த்தனை செய்த பெண்கள்.
திருத்தணி திரெளபதியம்மன் கோயிலில் நடந்து வரும் தீமிதி விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருத்தணி, பழைய தர்மராஜா கோயில் தெருவில் உள்ள இக்கோயிலில், தீமிதி விழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், இரவில் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திரு வீதியுலாவும் நடைபெற்று வருகிறது. மதியம் மகாபாரதச் சொற்பொழிவும், இரவு மகாபாரத நாடகமும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை கோயில் வளாகத்தில் அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக, 35 அடி உயரமுள்ள பனை மரம் நடப்பட்டது. தொடர்ந்து அர்ச்சுனன் தவ வேடத்தில் பனை மரத்தின் ஒவ்வொரு படிக்கும் ஒரு பாடல் பாடியவாறு ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, மரத்தின் உச்சியில் இருந்து அர்ச்சுனன் தவம்புரிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, திரளான பெண்கள் பனைமரத்தின் கீழ் படுத்து, திருமணம், குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, உற்சவர் திரெளபதியம்மனை வழிபட்டனர். வரும், 19-ஆம் தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடைபெறும்.