திருப்பதியில் உள்ள கோவிந்தராஜர் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாள் காலை கல்பவிருட்ச வாகனத்தில் கோவிந்தராஜர் மாடவீதியில் வலம் வந்தார்.
இக்கோயிலில் கடந்த சனிக்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் 8.30 மணி வரை கல்பவிருட்ச வாகன சேவை நடைபெற்றது. கல்பவிருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கோவிந்தராஜர் மாடவீதியில் வலம் வந்தார். நினைத்ததை அருளும் கல்பவிருட்ச வாகனத்தில் வரும் பெருமாளை அங்கு கூடியிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர். அதன் பின், மதியம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜருக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடைபெற்றன.
பின் இரவு 8 மணிக்கு தேசத்தைக் காக்கும் மாமன்னர்கள் வலம் வரக் கூடிய சர்வபூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்களுடன் கோவிந்தராஜர் மாடவீதியில் வலம் வந்தார். இதைக் காண மாடவீதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இந்த நிகழ்வில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வாகன சேவையின் போது கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
கோயில் எதிரில் உள்ள திருக்குளக்கரையில் மாலை வேளையில் கதாகாலட்சேபம், பக்திப் பாடல் கச்சேரி, ஹரிகதை உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. வாகன சேவைக்கு முன் ஜீயர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களை பாராயணம் செய்தனர்.