குழந்தை பாக்கியம் உண்டா? இல்லையா? எனத் துல்லியமாகக் கூற மானிடப் பிறப்பில் தோன்றிய ஜோதிடர்களுக்கு அனுமதி இல்லை. இது ஒரு பிரம்ம ரகசியம்.
ஒரு ஜாதகரின் கர்ம வினைப்பயன் தான் இதனைத் தீர்மானிக்கிறது. அதேபோல் ஒரு ஜாதகருக்கு எத்தனைக் குழந்தைகள், ஆண் குழந்தை உண்டா? பெண் குழந்தை உண்டா? என சில குறிப்புகள் ஒரு ஜாதகரின் ஜனன கால ஜாதகத்தில் இருக்கும் என்பது நிச்சயம்.
பிறக்கப்போகும் குழந்தைகள் இரட்டை குழந்தைகளாக இருக்குமா என்பதனையும் குறிப்பால் உணர்த்தும். எந்த கிரகங்களின் தசையில் இவ்வாறு இரட்டை குழந்தை பிறக்கும் எனவும் அறுதியிட்டுக் கூறிட முடியும்.
ஜோதிட சாஸ்திர விதிப்படி ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 5-ம் இல்லத்தில் (புத்திர ஸ்தானம்) இராகு அமையப் பெற்றால் அது புத்திர தோஷம் ஆகும்.
இராகு உச்சம் பெற்றும் நட்பு வீட்டில் அமைந்தும் சுபக்கிரகங்களின் பார்வை பெற்றும் பலமாக அமையப்பெற்றால் ஜாதகர்கள் நிச்சயம் இரட்டைக் குழந்தைகள் நல்ல ஆரோக்கியமுடன் பிறக்கக்கூடும்.