ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீரங்கநாச்சியாருக்கு பூச்சாற்று உத்ஸவம் என்னும் கோடைத்திருநாள் விழா தொடங்கியது.
வெளிக்கோடைத் திருநாள், உள்கோடைத்திருநாள் என 10 நாள்கள் நடைபெறும் விழாவில் வெளிக் கோடைத்திருநாள் விழா புதன்கிழமை தொடங்கியது.
இதற்காக ஸ்ரீரங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து மாலை 6.30-க்கு புறப்பட்டு கோடை நாலுகால் மண்டபத்தை இரவு 7 மணிக்கு அடைந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளி ஸ்ரீரங்கநாச்சியார் 8.30 வரை பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
பின்னர் மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார் ஸ்ரீரங்கநாச்சியார். வரும் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள வெளிக்கோடைத் திருநாள் விழாவில் மேற்குறிப்பிட்ட நேரங்களில் பக்தர்களுக்கு கோடை மண்டபத்தில் ஸ்ரீரங்கநாச்சியார் சேவை சாதிக்கிறார்.
வரும் 27 ஆம் தேதி முதல் உள்கோடைத் திருநாள் தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவையொட்டி ஸ்ரீரங்கநாச்சியார் மூலஸ்தான சேவை மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை கிடையாது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்கின்றனர்.