காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சனிக்கிழமை தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் அனந்த சரஸ் குளத்தில் உற்சவர் வரதராஜப் பெருமாளுக்கு நீராட்டு விழா நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இவ்விழா கடந்த 17-ஆம் தேதி கோயில் வளாகத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பத்து நாள்கள் நடைபெறும் விழாவின் 9-ஆம் நாளான சனிக்கிழமை, கோயில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக, கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் வரதராஜப் பெருமாள் எழுந்தருளினார்.
அங்கு அவருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, பெருமாள் பக்தர்கள் வெள்ளத்துக்கு இடையே அனந்தசரஸ் திருக்குளத்துக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டார்.
அங்கு அவருக்கு நீராட்டு விழா நடைபெற்றது. வரதராஜப் பெருமாள், குளத்தில் நீராடியதைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.