பிரம்மாண்ட ஷவரில் குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை அகிலா!
திருச்சியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் திருவானைக்கா கோயில் யானை அகிலாவுக்கு ஷவர் மூலம் குளிக்கக் கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
பிரசித்தி பெற்ற நீர்தலமான திருவானைக்கா அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலுக்கு, கடந்த 2011-ம் ஆண்டு அசாமில் இருந்து கொண்டுவரப்பட்ட பெண் யானை தான் அகிலா. தற்போது 17 வயதாகும் அகிலாவுக்கு கோயிலில் பல ரசிகர்கள் உள்ளனர். அந்த ஊரின் செல்லப்பிள்ளையாகவும் இருந்துவருகிறது.
இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோயில் யானை அகிலாவுக்கு சென்னையைச் சேர்ந்த நிறுவனம் பிறந்தநாள் பரிசாக ரூ.1 லட்சம் மதிப்பிலான பிரத்யேகமான குளியலறை ஒன்று கட்டி தரப்பட்டுள்ளது.
யானையின் உடலுக்கு ஏற்ப ஷவரில் இருந்து தண்ணீர் கொட்டும் விதமாகக் குளியலறை கட்டமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 20 ஷவர் குழாய்கள் கொண்டு அந்த குளியலறை மோட்டர் மூலம் தண்ணீர் செலுத்தப்படுகிறது.
ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து முறை வரை பிரம்மாண்ட ஷவரில் குளிக்கவைப்பதாகவும், கோடை வெயிலால் யானைக்கு ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகள் தற்போது சற்று குறைந்திருப்பதாக யானைப் பாகன் தெரிவித்துள்ளார். பிரம்மாண்ட குளியலறையில் ஆனந்தமாக ஆட்டம்போட்டு வருகிறது யானை அகிலா.