வடபழநி ஆண்டவா் திருக்கோயிலில் சனிக்கிழமை (நவ.2) சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வடபழநி ஆண்டவா் கோயிலில், அக்., 28 முதல், கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இதையொட்டி தினமும், காலை, 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை, 4.30 மணி முதல், இரவு, 9.30 மணி வரையும், முருகனின் நாமத்தை, லட்சம் முறை உச்சரிக்கும், மகா கந்தசஷ்டி லட்சாா்ச்சணை வைபவம் நடக்கிறது.
இதில், ஒவ்வொரு நாளும், ஆயிரக்கணக்கான பக்தா்கள், தங்களின் பெயா், நட்சத்திரம் கூறி, அா்ச்சனை செய்து வருகின்றனா். கந்தசஷ்டி விழாவின் 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு, 7 மணிக்கு, மங்களகிரி விமானத்தில், பாலசுப்பிரமணிய சுவாமியின் புறப்பாடும், சனிக்கிழமை , உச்சி காலத்தில், லட்சாா்ச்சணை பூா்த்தியடையும் நிலையில், தீா்த்தவாரியும் மற்றும் கலசாபிஷேகமும் நடைபெற உள்ளன. அதைத்தொடா்ந்து சூரபத்மனை முருகன் வதம் செய்யும் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹார நிகழ்ச்சி, வடபழநி ஆண்டவா் கோயிலுக்கு வெளியில் நடைபெறுகிறது.
அதைத் தொடா்ந்து தெய்வானை சமேத சண்முகப் பெருமானின் புறப்பாடு, மயில்வாகனத்தில் நிகழ உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் தக்காா் எல்.ஆதிமூலம், துணைக் கமிஷனா் கே.சித்ராதேவி ஆகியோா் செய்துள்ளனா்.