பொன்னை அருகே நீவா நதிக்கரையோரம் அமைந்துள்ள கீரைசாத்து கிராமத்தில் உள்ள ஏலவார்குழலி அம்பாள் சமேத வரபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் யாக சாலை பூஜை, ஞானவேள்வி, தத்வார்ச்சனை, திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ரதான, சங்கல்பம், கலச புறப்பாடு நடைபெற்றன.
திருவலம் சிவபூதகன வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் கோயில் கோபுர கலசத்துக்கும், மூலவர் ஏலவார்குழலி அம்பாள் சமேத வரபுரீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.