ராமேசுவரம் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட செங்கற்களை ரயில் மூலம் அயோத்திக்கு பக்தர்கள் ஞாயிற்றுகிழமை எடுத்துச் சென்றனர்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த நவ. 9-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் தமிழக மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த ராம பக்தர்கள், அயோத்தியில் கட்ட உள்ள ராமர் கோயிலுக்கு அனுப்புவதற்காக செங்கற்களில் ஸ்ரீ ராமா என எழுதி அவற்றுக்கு ராம நாம ஜப வேள்வி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை ஞாயிற்றுகிழமை நடத்தினர்.
இதனையடுத்து, பூஜை செய்யப்பட்ட செங்கற்களை ராமேசுவரம் ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு அயோத்திக்கு புறப்படும் சாரதா விரைவு ரயிலில் பக்தர்கள் எடுத்து சென்றனர்.
இவர்கள் வரும் 13-ஆம் தேதி புதன்கிழமை அயோத்தியில் ராமர் கோயில் நிர்வாகி நித்திய கோபால்தாஸ் சுவாமிகளிடம் ஒப்படைத்து ஒரு வாரம் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.