ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வடபத்ரசாயி பெருமாள் சந்நிதியில், ஐப்பசி பெளர்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் ஸ்ரீபெரிய பெருமாள் எழுந்தருளினார்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பெளர்ணமி இரவில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ஐப்பசி பெளர்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு உற்சவரான பெரிய பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, இரவு 8 மணிக்கு மேல் ஸ்ரீபெரிய பெருமாள் புறப்பாடு நடைபெற்றது.
இதில், சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளிய ஸ்ரீபெரிய பெருமாளை, பக்தர்கள் ஊஞ்சல்போல் ஆட்டி அசைத்து கோயிலின் மேல் தளத்தில் உள்ள பிரகாரத்தில் மும்முறை சுற்றி வந்து, அதன்பின்னர் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அப்போது, திருப்பாவை கோஷ்டியினரால் பாசுரங்கள் பாடப்பட்டன.
இந்த உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாட்டினை, கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.