திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான இன்று கல்பவிருட்ச வாகனத்தில், மலையப்பசாமி திருவீதியுலா வருகிறார்.
திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி, வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
பிரம்மோற்சவத்தின் முதல் இரண்டு நாள்கள் ஊர்வன, பறப்பன உள்ளிட்ட வாகனங்களில் வலம் வந்த மலையப்ப சுவாமி, மூன்றாம் நாளான நேற்று சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் அலங்காரத்தில் மலையப்பசாமி திருவீதியுலா வந்தார்.
நான்காம் நாளான இன்று கல்பவிருட்ச வாகனத்தில் வேணுகோபால ஸ்வாமி அலங்காரத்தில் தேவஸ்தான அதிகாரிகள் புடைசூழ மாடவீதியில் வலம் வந்தார்.
திருவீதியுலா வந்த மலையப்பசாமியை பக்தர்கள் அனைவரும் "கோவிந்தா" "கோவிந்தா" என்ற கோஷங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு முழக்கமிட்டனர். ஏழுமலையானைத் தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் ஆகியன பிரம்மோற்சவ விழாவிற்கு இன்று திருப்பதி கோயிலில் சமர்ப்பிக்கப்படுகிறது.