திருப்பதி பிரம்மோற்சவத்தின் 8-ம் நாள் விழா கோலாகலம்: பக்தர்கள் வெள்ளத்தில் மகாதேரோட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான மகா தேரோட்டம்..
திருப்பதி தேரோட்டத்தில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த தேர்
திருப்பதி தேரோட்டத்தில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த தேர்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான மகா தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 30-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாட்களும் வெவ்வேறு விதமான வாகனங்களில் பூதேவி, ஸ்ரீதேவி தாயார்களுடன் மலையப்ப சாமி எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளான இன்று தேரோட்டத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில்  ஏழுமலையானின் மகா தேர்ப் பவனி வந்தது. அப்போது தேரில் மலையப்ப சாமி எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் பவனி வந்தார். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு "கோவிந்தா கோவிந்தா" என கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து மலையப்ப சாமியை வழிபட்டனர். 

தேரோட்டத்தின்போது யானை, குதிரை போன்றவை அணிவகுத்துச் சென்றது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. தொடர்ந்து, இரவு அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் கல்கி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேரோட்டத்தை முன்னிட்டு மக்கள் வெள்ளம் போல் அலை அலையாய் திரண்டுள்ளனர். இதனால், விஐபி சிறப்புத் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் பொது தரிசனத்தில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com