திருவாரூர் சரஸ்வதி தேவி கோயிலில் ஆயுதப் பூஜையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டிலேயே சரஸ்வதி தேவிக்கென்றே தனிக்கோயில் திருவாரூரில் தான் அமைந்துள்ளது. கருவறையில் வீணை இல்லாத சரஸ்வதியை தரிசிக்கலாம்.
ஒட்டக் கூத்தரை எதிரிகள் சூழ்ந்துகொண்டு, பரணி பாடினால் விட்டுவிடுவதாகக் கூற கூத்தரின் நாவில் அமர்ந்து பரணி பாடினாள் இந்த அன்னை. தன்னைக் காத்த இந்த சரஸ்வதியை ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியவே என மனதார பாடிப் பணிந்தார் ஒட்டக்கூத்தர்.
பௌர்ணமி அன்று இந்த அன்னைக்குத் தேன் அபிஷேகம் செய்து அந்த பிரசாத தேனை மோதிரவிரலால் சரஸ்வதியை தியானித்தபடி உட்கொள்ள, கல்வியறிவு பெருகும் என்பது ஐதீகம்.
சரஸ்வதி பூஜையன்று பக்தர்கள் சரஸ்வதி தேவியின் பாதங்களை தாங்களே பூஜிக்கும் வகையில் கருவறையிலிருந்து நீண்ட பாதங்கள் அமையுமாறு அலங்கரிப்பது மேலும் சிறப்பு.
சரஸ்வதி பூஜையான இன்று சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மாணவ மாணவிகள் மற்றும் திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டுச் சென்றனர்.