மூத்த குடிமக்களுக்கு இந்த மாதத்துக்கான இலவச தரிசனம் குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருமலை தேவஸ்தானம் மக்களுக்கு பலவிதமான வசதிகளை செய்துவருகின்றது. அதில் ஒன்று தான் மூத்த குடிமக்களுக்கு இலவச தரிசனம். ஆம், வயதான பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி சுலபமாக ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் தேவஸ்தானம் இந்த ஏற்பாடு செய்துள்ளது.
அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளி பக்தர்கள் மற்றும் கைக் குழந்தை வைத்திருப்பவர்களுக்கும் மாதந்தோறும் இரு நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதன்படி, அக்டோபர் மாதம் வழங்க உள்ள இலவச முதன்மை தரிசனங்களின் தேதிகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் அக்டோபர் 15 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மூத்த குடிமக்கள் (65 வயதைக் கடந்தவா்கள்), மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் போ், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் போ், மாலை 3 மணிக்கு ஆயிரம் போ் என ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேருக்கு என இரு நாள்கள் 8 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்க உள்ளது.
அதேபோல் அக்டோபர் 16 மற்றும் 30 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது.
தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.