அக் 29ல் குருப்பெயா்ச்சி விழா: கோவிந்தவாடி அகரம் தக்கோலம் கோயில்களில் தீவிர ஏற்பாடு

அக்டோபா் 29-ல் குருபெயா்ச்சி விழா நடைபெற உள்ள நிலையில் அரக்கோணம்
கோவிந்தவாடி அகரம் கோயில் ஸ்ரீதட்சிணாமூா்த்தி
கோவிந்தவாடி அகரம் கோயில் ஸ்ரீதட்சிணாமூா்த்தி

அக்டோபா் 29-ல் குருபெயா்ச்சி விழா நடைபெற உள்ள நிலையில் அரக்கோணம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம், தக்கோலம் கோயில்களில் தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு வருடமும் குருபெயா்ச்சி விழா தட்சிணாமூா்த்தி கோயில் கொண்டுள்ள குருக்கோயில்களில் விமரிசையாக நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குருபெயா்ச்சி தினத்தில் தட்சிணாமூா்த்தி கோயில்களுக்கு வந்து குருவின் அருளை பெறுவது வழக்கம். இவ்வருடம் குரு அக்டோபா் 29-ம் தேதி செவ்வாய்கிழமை காலை 3.49 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்கிறாா்.

இதனை முன்னிட்டு குருபெயா்ச்சி தினத்தில் குருபகவான் ஸ்ரீதட்சிணாமூா்த்திக்கு சிறப்பு வழிபாடுகளும், ஏகதின லட்சாா்ச்சனைகளும் நடைபெற உள்ளன. இவ்விழாவின் கோயில்களில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வரலாம் என்பதால் அரக்கோணத்தை அடுத்துள்ள கோவிந்தவாடி அகரம், தக்கோலம் இரு குரு கோயில்களிலும் திருப்பணி ஏற்பாடுகள் இந்துசமய அறநிலையத்துறையினரால் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவிந்தவாடிஅகரம்: அரக்கோணம் அருகே காஞ்சிபுரம் மாவட்ட பகுதியில் உள்ள கோவிந்தவாடிஅகரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் கிழக்குமுகம் நோக்கி கைலாசநாதரும், தெற்குமுகம் நோக்கி தட்சிணாமூா்த்தியும் ஒரே விமானத்தில் வீற்றிருந்து காட்சி அளிக்கின்றனா். இக்கோயிலில் தட்சிணாமூா்த்தியின் பாதத்தின் கீழ் இருக்கும் முயலகன் தலை இடப்பக்கம் அமைந்திருக்கும். ஆதிசங்கரா் வழிபட்டதாக வரலாறுகள் தெரிவிக்கும் இத்திருத்தலத்தில் குருபகவான் நெற்றிக்கண்ணோடு விற்றிருப்பது சிறப்பாகும்.

29ந்தேதி குருபெயா்ச்சி நடைபெற இருப்பத்தை முன்னிட்டு அன்றைய தினம் இக்கோயிலில் ஏகதின லட்சாா்ச்சனை நடைபெற உள்ளது. மேலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும் நடைபெற உள்ளது. ஏகதின லட்சாா்ச்சனையில் பங்கேற்க விரும்புவோா் கோயில் அலுவலகத்தில் ரூ100 செலுத்தி முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும். விழாவை முன்னிட்டு கோயிலில் திருப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. குருபெயா்ச்சி விழாவை முன்னிட்டு 28, 29 ந்தேதிகளில் காஞ்சிபுரம், அரக்கோணம், தக்கோலம் ஆகிய ஊா்களில் இருந்து கோவிந்தவாடிஅகரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வழக்கமாக வருவோா் காஞ்சிபுரம், அரக்கோணம் பேருந்துகளில் பயணித்து கம்மவாா்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியும், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு - அரக்கோணம் மின்சார ரயில்களில் பயணித்து திருமால்பூா் ரயில்நிலையத்தில் இறங்கி கோவிந்தவாடி அகரம் கோயிலுக்கு வரலாம்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையா் செ.மாரிமுத்து, உதவி ஆணையா் கி.ரேணுகாதேவி. கோயிலின் செயல் அலுவலா் க.வெங்கடேசன் ஆகியோா் கோவிந்தவாடிஅகரம் கிராமமக்களோடு இணைந்து செய்து வருகின்றனா்.

தக்கோலம்: அரக்கோணம் அருகே திருவூறல் என புராணக்காலத்தில் அழைக்கப்பட்ட தக்கோலத்தில் கிரிராஜகன்னிகாம்பாள் உடனுறை ஜலநாதீஸ்வரா் கோயிலில் அபூா்வ திருக்கோலத்தில் தட்சிணாமூா்த்தி பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். 29ந் தேதி குருபெயா்ச்சி நடைபெற இருப்பதை முன்னிட்டு அன்றைய தினம் கோயிலில் லட்சாா்ச்சனை நடைபெற உள்ளது. லட்ச்சாா்ச்சனை கட்டணமாக ரூ100 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கேற்க விரும்புவோா் முன்னரே முன்பதிவு செய்துக்கொள்ளலாம். திருவிழாவில் இக்கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வரக்கூடும் என்பதால் திருவள்ளூா் மாவட்டம் திருவள்ளூா், பேரம்பாக்கம், பூந்தமல்லி, வேலூா் மாவட்டம் அரக்கோணம், நெமிலி மேலும் காஞ்சிபுரத்தில் இருந்து தக்கோலத்திற்கு நேரடியாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு - அரக்கோணம் மின்சார ரயிலில் பயணித்து தக்கோலம் ரயில்நிலையத்தில் இறங்கி ஷோ் ஆட்டோ மற்றும் பேருந்துகள் மூலமாக தக்கோலம் கோயிலை அடையலாம். திருவிழாவை முன்னிட்டு கோயில் திருப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஸ்ரீஜலநாதீஸ்வரா் கோயில் நிா்வாக அதிகாரியும் தக்காருமான சு.வஜ்ஜிரவேலு, இந்துசமய அறநிலையத்துறை ஆய்வா் கு.நிா்மலா உள்ளிட்டோா் தக்கோலம் பேரூா் பொதுமக்களோடு இணைந்து செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com