கடக ராசிக்கு இந்தாண்டு குருப்பெயர்ச்சி அனுகூலமாக இருக்குமா? விடியோ!

கடக ராசிக்கு இந்தாண்டு குருப்பெயர்ச்சி அனுகூலமாக இருக்குமா? விடியோ!

இதுவரை உங்கள் ராசியில் 5ம் இடமான பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து வந்த குருபகவான்

ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி நடைபெற்றாலும் இந்தாண்டு குருபகவான் தனது சொந்த வீடான தனுசு ராசிக்கு 5-ல் இடம் பெயர்கிறார். இது கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அற்புத நிகழ்வாகும். 

குருபார்க்க கோடி நன்மை என்பார்கள். அந்தவகையில் கடக ராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறது என்பதை பற்றி விரிவாகப் பார்ப்போம். 

எதையும் சிந்தித்துச் செயல்படும் கடக ராசி அன்பர்களே..!

இதுவரை உங்கள் ராசியில் 5ம் இடமான பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து வந்த குருபகவான் இதற்குப்பின் உங்கள் ராசியில் 6ம் இடமான ருண ரோக ஸ்தானத்தில் பெயர்ச்சி அடைகிறார். இதுவரை இருந்துவந்த தடைகள் மற்றும் எதிர்ப்புகளை வெற்றிபெறக்கூடிய பொன்னான காலமாக இது அமையும்.

கடின முயற்சியின் பேரில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் செயல்களில் நிர்வாகத் திறமை பளிச்சிடும். நீண்டநாள் பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். அதிக வட்டிக்கு வாங்கிய கடன்கள் திட்டமிட்டு அடைத்துவிடுவீர்கள். பொருளாதாரம் ஏற்றத்தாழ்வாக இருந்தாலும் முக்கிய தேவைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது. ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆலய திருப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். 

எவரையும் நேரடியாகப் பகைத்துக்கொள்ளாமல் இடம் பொருள் ஏவல் அறிந்து பேசிப்பழகுவீர்கள். உங்களின் பலவீனத்தைப் புரிந்துகொள்வீர்கள். உங்கள் முயற்சிகளில் அனாவசிய வேகம் வேண்டாம். நண்பர்களை உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் உங்களை மதித்துப் பேசும் காலகட்டமாக இது அமையும். 

பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்து அதனால் பெருமை அடைவீர்கள். அனைவரிடமும் நயந்து அனுசரித்துச் சென்று உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உங்களை எவரும் சூழ்ச்சியால் வெல்ல முடியாது. எதிரிகளின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு அவர்களிடமிருந்து விலகிவிடுவீர்கள். 

வெளிவட்டார பழக்கவழக்கங்களால் நல்ல வரவேற்பையும் பெறுவீர்கள். பொருளாதாரம் படிப்படியாக உயரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். யோகா பிராணாயாமம் செய்வீர்கள். குழந்தைகளுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எதையும் செய்வீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்தாலும் அவர்களால் சிறு பிரச்னைகள் உண்டாகலாம். உங்கள் முகத்தில் வசீகரமும், நடையில் மிடுக்கும் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு..

இந்தக் குருப்பெயர்ச்சியில் அனைவரிடமும் சுமுகமாகப் பழகுவார்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடிவரும். அலுவலகப் பயணங்களாலும் ஓரளவு நன்மை உண்டாகும். தடைப்பட்டிருந்த ஊதிய உயர்வு உங்களுக்குக் கிடைக்கும். உடலில் சிறிது சோர்வு காணப்படும் அதனால் சுறுசுறுப்பு குறையும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். 

வியாபாரிகளுக்கு..

கொடுக்கல் வாங்களால் சிறப்புகளைக் காண்பார்கள். கூடுதல் அக்கறையோடு வியாபாரத்தைச் செய்வீர்கள். ஓய்வில்லாமல் உழைத்து லாபத்தை அள்ளுவார்கள். புதிய கடன்களைப் பெற்று வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள். இருப்பினும் தேவைக்கேற்ற சரக்குகளை மட்டும் வாங்கி விற்பனை செய்யவும்.

விவசாயிகளுக்கு..

கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாகக் கால்நடைகளை வைத்திருப்போர் எதிர்பார்த்த லாபத்தை அடைவர். அதேசமயம் உழைப்பிற்கேற்ற பலனடைவதால் நிறையக் கஷ்டப்பட வேண்டியிருக்கும். நீர்ப் பாசன வசதிகளை மேம்படுத்திக்கொள்ள முயற்சிகளைச் செய்வீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு..

பொறுப்புடன் நடந்துகொண்டு தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வார்கள். உங்கள் செயல்களைத் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். அதே நேரம் கட்சியில் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் அரசு அதிகாரிகளிடம் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். 

கலைத்துறையினருக்கு..

இந்தக் காலகட்டத்தில் புதிய ஒப்பந்தங்களைச் செய்வதில் சில தடைகள் ஏற்படலாம். வருமானம் சீராக இருப்பதால் ரசிகர் மன்றங்களுக்குச் சிறிது செலவுகள் செய்ய நேரிடலாம். உங்களின் கடமையை உணர்ந்து செயல்படுவீர்கள். 

பெண்மணிகளுக்கு..

குருப்பெயர்ச்சியினால் பொருளாதாரம் திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். குழந்தைகளுக்கான கடமைகளைச் செவ்வனே செய்து மகிழ்வீர்கள். கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவீர்கள். உங்களை நாடிவரும் நண்பர்களுக்கு உதவிசெய்து நற்பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். 

மாணவமணிகள்..

படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவார்கள். பெற்றோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்துகொள்வார்கள். பிடிவாத குணத்தை விட்டொழிக்கவும். 

பரிகாரம்

மஹாலட்சுமியை வழிபட்டு வரவும் அனைத்துவித நன்மைகளும் ஏற்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com