வேதாரண்யம் அருகே இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் பங்கேற்ற மத நல்லிணக்க விநாயகர் ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருப்பம்புலம் தெற்கு பகுதியில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதர், சிற்றம்பலம் விநாயகர் கோயிலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, நீரில் கரைக்கக் கூடிய விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கடந்த ஒரு வாரமாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றுவந்தன.
இதைத்தொடர்ந்து, விநாயகர் சிலையை கரைப்பதற்காக செவ்வாய்க்கிழமை மாலை ஊர்வலம் நடைபெற்றது. இதில், கடிநெல்வயல் பங்குத் தந்தை ஆரோக்கியநாதன், தோப்புத்துறை ஜமாஅத் மன்றத்தைச் சேர்ந்த சுல்தான் மரைக்காயர், சோட்டாபாய், தொழிலதிபர் முகம்மது ரபீக் ஆகியோர் பங்கேற்று, தேங்காய் உடைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். தோப்புத்துறை மற்றும் கோடியக்கரை முஸ்லிம் ஜமாஅத் மன்றத்தினர் முன்னிலை வகித்தனர்.
அகரம் மெட்ரிக். பள்ளியின் தாளாளர் பி.வி.ஆர். விவேக் தலைமை வகித்தார். நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஜி.கே. கனகராஜ், முன்னாள் கவுன்சிலர் எஸ். சிவப்பிரகாசம், பஞ்சாயத்துராஜ் கமிட்டி மாவட்டத் தலைவர் ஆரோ. பால்ராஜ், மருதூர் கணேசன், கிறிஸ்தவ அமைப்பின் நாட்டாண்மை டி. அருள்நாதன், அகரம் பள்ளியின் முதல்வர் எஸ். வசீம் ஏஜாஸ், சமூக ஆர்வலர்கள் எல்விஸ்லாய் மச்சோடா, ரகமதுல்லா, ரபீக், முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலை, கருப்பம்புலம் வடக்கு பகுதியில் உள்ள மருதம்புலம் ஏரியில் கரைக்கப்பட்டது. ஊர்வலத்தில் வழிநெடுகிலும் பெண்கள் விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.