குரு பெயர்ச்சியையொட்டி, திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார கோயிலில் லட்சார்ச்சனை வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தொடங்குகிறது.
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இக்கோயில், நவ கிரகங்களில் குரு பகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குரு பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு குரு பகவான் அக்டோபர் 29-இல் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்கிறார். இதை முன்னிட்டு அன்றைய தினம் இக்கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது.
இதை முன்னிட்டு குரு பகவானுக்கு லட்சார்ச்சனை விழா அக்டோபர் 24-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை முதல்கட்டமாகவும், குரு பெயர்ச்சிக்குப் பின் அக்டோபர் 31-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7-ஆம் தேதி வரை இரண்டாவது கட்டமாகவும் நடைபெறவுள்ளது.
ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்களும் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம். லட்சார்ச்சனையில் பங்கேற்க ரூ.400 செலுத்த வேண்டும். குரு பகவான் உருவம் பொறித்த வெள்ளியால் செய்த 2 கிராம் டாலர் பிரசாதமாக வழங்கப்படும். லட்சார்ச்சனை காலை 9 முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும்.
தபால் மூலம் லட்சார்ச்சனை பிரசாதம் பெற விரும்புவோர் தங்களுடைய பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரம், லக்னம் ஆகிய விவரங்களுடன் தொகையை பணவிடை, வரவோலை (எம்ஓ, டிடி) எடுத்து உதவி ஆணையர், செயல் அலுவலர் என்ற பெயருக்கு கும்பகோணத்தில் மாற்றத்தக்க வகையிலோ அல்லது சிட்டி யூனியன் வங்கி ஆலங்குடி -612801 என்ற கிளையில் மாற்றத்தக்க வகையிலோ எடுத்து அனுப்பலாம்.