காளஹஸ்தி கோயிலின் புதிய செயல் அதிகாரியாக, சந்திரசேகர ரெட்டியை அறநிலையத் துறை நியமித்துள்ளது.
ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயில், ஆந்திர மாநில அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இக்கோயிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து ராகு-கேது பரிகார பூஜை செய்துவிட்டுச் செல்கின்றனர். இந்நிலையில், இந்த கோயில் செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த ராமசாமியை, கடந்த வாரம் அறநிலையத் துறை பணிமாற்றம் செய்தது.
அப்பதவிக்கு புதிதாக, சந்திரசேகர ரெட்டியை அறநிலையத் துறை அதிகாரிகள் நியமித்துள்ளனர். இவர், வியாழக்கிழமை காலை காளஹஸ்தி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, பதவியேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன், ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரியாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.