திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் உள்ள அரங்கநாதருக்கு திருபவித்ர உற்சவம் இன்று தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி, புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழை திருநாள் ஒன்பது நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான பவித்ர உற்சவம் இன்று தொடங்குகிறது.
முதல் நாளான இன்று காலை 9.15-க்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு காலை 9.45-க்கு யாகசாலைக்கு வந்தார். அதைத்தொடர்ந்து மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார்.
பவித்ர உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு அருகில் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதிப்பார்.
உற்சவத்தின் முக்கிய நிகழ்வான ஒன்றான பூச்சாண்டி சேவை எனப்படும் அங்க உபாங்க சேவை நாளை(செப்.10) மதியம் நடைபெறுகிறது. பூச்சாண்டி சேவையின் போது மூலவர் ரெங்கநாதரின் முகம் உள்பட திருமேனி முழுவதும் நூலிழைகளைச் சுருள், சுருளாக வைத்து அலங்கரித்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், செப்.15-ம் தேதி நம்பெருமாள் நெல் அளவையும், செப்.17-ம் தேதி தீர்த்தவாரியும் கண்டருளுகிறார். செப்.18-ல் தைலக்காப்பு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் அறங்காவலர் குழு செய்துவருகின்றனர்.