சபரிமலை ஐயப்பன் கோயில் திருவோண பூஜைகளுக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் தமிழ் மாத பூஜைகளுக்காக ஒவ்வொரு மாதமும் நடை திறக்கப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
அதன்படி, இம்மாதம் திருவோண பூஜைகளுக்காக இன்று மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடைதிறந்து விளக்கேற்றுகிறார். இரவு 10 மணி அளவில் நடை அடைக்கப்படும்.
மீண்டும் நாளை காலை 5.00 மணிக்கு நடை திறந்து, நிர்மால்ய தரிசனத்துக்குப் பின், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனாரு நெய் அபிஷேகத்தைத் துவங்கிவைப்பார்.
செப்.11-ம் தேதி திருவோண தினத்தன்று ஐயப்பனுக்கு மஞ்சள் பட்டு உடுத்தி தீபாராதனை நடைபெறும். அதன்பின்னர், செப்.13 இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.