பழனியை அடுத்த பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ விழாவையொட்டி செப்டம்பர் 16-ல் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயில்களில் அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆவணி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காலையில் கோயிலில் அனுமதி கோருதல், புண்யாவாசனம், ரக்க்ஷாபந்தனம் ஆகியன நடத்தப்பட்டு கிராமசாந்தி, வாஸ்து சாந்தி பூஜைகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து வாஸ்து ஹோமம், விஷ்வக்சேனர் ஆராதனை, வாத்யங்களுக்கு பேரிபூஜை ஆகியன திருவள்ளரை பட்டரால் நடத்தப்பட்டது. சங்கு, சக்கரம், திருநாமம், கருடாழ்வார், பூஜை பொருள்கள் ஆகியன பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு கொடிபூஜை நடத்தப்பட்டு கோயிலை சுற்றி வலம் வர செய்யப்பட்டது. நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்கள், வேதபாராயணம் மேளதாளம் முழங்க கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.
பின் தர்ப்பை, மாவிலைகளால் கம்பம் அலங்கரிக்கப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின் கோயிலின் உள்ளே மூலவர் பூதேவி, ஸ்ரீதேவி சமேதர் அகோபில வரதராஜப் பெருமாளுக்கும், உற்சவருக்கும் பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. வரும் செப்டம்பர் 14-ல் திருக்கல்யாணமும், செப்டம்பர் 15-ம் தேதி பாரிவேட்டையும், செப்டம்பர் 16-ல் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.
செப்டம்பர் 18-ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா நாள்களில் குதிரை வாகனம், பவளக் கால்சப்பரம், அனுமார் வாகனம், சிம்ம வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா மற்றும் கோயில் வளாகத்தில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் பழனிக்கோயில் துணை ஆணையர்(பொறுப்பு) செந்தில்குமார், மேலாளர் உமா, கண்காணிப்பாளர் முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.