திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடந்த கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி 5 மணி நேரம் தாயார் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாருக்கு செப். 12 முதல் சனிக்கிழமை செப்.14 வரை வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை தாயார் கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை தாயாரை சுப்ரபாதத்துடன் எழுப்பி அர்ச்சகர்கள் தாயாருக்கு அபிஷேகம், தீப, தூப ஆராதனைகள் நடத்தினர்.
அதன்பின் தோமாலை, அர்ச்சனா உள்ளிட்ட சேவைகள் தாயாருக்கு தனிமையில் நடத்தப்பட்டது. பின்னர், காலை 6 மணி முதல் 10 மணி வரை கோயில் வெளிவாசல் முதல் கருவறை வரை மங்கல திரவிய கலவையால் சுத்தப்படுத்தப்பட்டது. இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுத்தம் செய்யப்பட்ட பின் பூஜைப் பொருள்கள் கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டன. தரிசன வரிசைகள் அமைக்கப்பட்டு, புதிய திரைச்சீலைகள் போடப்பட்டது.
அதன்பின் பக்தர்கள் தாயாரின் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். இதை முன்னிட்டு தாயார் தரிசனம் 5 மணி நேரம் ரத்து செய்யப்பட்டது. காலை நடைபெறும் கல்யாண உற்சவம், குங்குமார்ச்சனை உள்ளிட்ட சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.