தாயகம் திரும்பிய நடராஜர் சிலை: மேள, தாளத்துடன் உற்சாக வரவேற்பு!

37 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட நடராஜர் சிலை இன்று ரயில் மூலம் சென்னை வந்தடைந்தது. 
தாயகம் திரும்பிய நடராஜர் சிலை: மேள, தாளத்துடன் உற்சாக வரவேற்பு!

37 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட நடராஜர் சிலை இன்று ரயில் மூலம் சென்னை வந்தடைந்தது. இந்த சிலைக்குப் பக்தர்கள் மேள தாளம் முழங்க சிறப்புப் பூஜைகள் செய்து வரவேற்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் உள்ள கோயிலில் இருந்து 37 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன, 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த நடராஜர் சிலையை சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழுவினர் மீட்டுள்ளனர்.

கல்லிடைக்குறிச்சியில் அருள்மிகு குலசேகரமுடையார் உடனுறை அறம்வளர்த்தநாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் மன்னர் குலசேகர பாண்டியனால் கடந்த 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்தக் கோயிலில் இருந்த நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் மற்றும் திருவில்லி விநாயகர் சிலைகள் கடந்த 1982-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி திருடு போயின. 

இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். ஆனால், இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து கடந்த 1984-ம் ஆண்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

சிலைக் கடத்தல் தொடர்பாக விசாரிக்கும் உயர்நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் பொன் மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், துணைக் கண்காணிப்பாளர் மலைச்சாமி ஆகியோர் கொண்ட அதிகாரிகள் இந்த வழக்கை மீண்டும் எடுத்து விசாரித்தனர்.

அதில், திருடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவின் அடிலைடு நகரில் உள்ள ஏஜிஎஸ்ஏ அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தொல்லியல் துறை நிபுணர் நாகசாமி உள்ளிட்டோரின் உதவியுடன் இந்தச் சிலை கல்லிடைக்குறிச்சி அருள்மிகு குலசேகமுடையார் உடனுறை அறம்வளர்த்தநாயகி அம்மன் கோயிலுடையது என்பது ஆதாரங்களின் அடிப்படையில் ஆஸ்திரேலியா அரசிடம் நிரூபிக்கப்பட்டது.

இந்தியத் தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஏஜிஎஸ்ஏ அருங்காட்சியக அதிகாரிகளிடம் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அச்சிலையை ஒப்படைக்க அவர்கள் ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து, ஆஸ்திரேலியா சென்ற உயர்நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழுவிடம் நடராஜர் சிலை ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை நடராஜர் சிலை பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டது. மீட்கப்பட்ட நடராஜர் சிலைக்கு மேள, தாளம் முழங்க சிறப்புப் பூஜை செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கல்லிடைக்குறிச்சி அருள்மிகு குலசேகமுடையார் உடனுறை அறம்வளர்த்தநாயகி அம்மன் கோயிலில் வழிபாட்டுக்கு வைக்கப்பட உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com