திருமலையில் அனந்த பத்மநாப சுவாமி விரதத்தையொட்டி, சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் வியாழக்கிழமை தீர்த்தவாரி நடத்தப்பட்டது.
திருமலையில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசி அன்று அனந்த பத்மநாப சுவாமி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை சதுர்த்தசி திதியையொட்டி, திருமலையில் இவ்விரதம் கடைப்பிடிக்கப்பட்டது. இதற்காக காலையில் ஏழுமலையான் சந்நிதியில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பின் ஏழுமலையான் காலடியில் வைத்த கங்கணத்தை அர்ச்சகர்கள் செயல் அதிகாரி கையில் கட்டினர். அதன்பின், ஏழுமலையான் கருவறையிலிருந்து சக்கரத்தாழ்வார் ஊர்வலமாக திருக்குளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின், சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது தேவஸ்தான அதிகாரிகள் திருக்குளத்தில் புனித நீராடினர். அனந்த பத்மநாப சுவாமி விரதம் 108 திவ்ய தேசங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள், வைகுண்ட ஏகாதசி, ரத சப்தமி, அனந்த பத்மநாப சுவாமி விரத தினங்களில் மட்டுமே சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீர்த்தவாரி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.