காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் பவித்ரோற்சவம் தொடங்கியதை முன்னிட்டு வியாழக்கிழமை அங்குரார்ப்பணம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் ஆண்டு தோறும் பவித்ரோற்சவம் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் வியாழக்கிழமை அங்குரார்ப்பணத்துடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை 2 -ஆவது நாளாக பெருமாளுக்கும்,பெருந்தேவித் தாயாருக்கும் அதிவாசத்தை முன்னிட்டு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
இதனையடுத்து மாலையில் பெருமாள் அத்திகிரி மலையிலிருந்து கோயில் தரைத்தளத்தில் உள்ள கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சனிக்கிழமை முதல் வரும் 19-ஆம் தேதி வரை தினசரி காலையில் யாகசாலை பூஜைகளும்,உற்சவரான பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவி சமேதராக திருவடி கோயிலுக்கு புறப்பாடும் நடைபெறுகிறது.
20-ஆம் தேதி பெருமாள் மாடவீதிகளில் புறப்பாடு நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பட்டாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.