தஞ்சாவூர் புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஆவணி தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலின் மூலஸ்தானம் புற்று மணலால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆவணித் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். அதன்படி, இந்தாண்டு ஆவணித் திருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அதேபோன்று ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் அம்மனுக்கு அலங்காரங்களும் செய்யப்பட்டது.
ஆவணி கடைசி ஞாயிறான நேற்று அம்மனுக்கு ரத்ன அங்கி அலங்காரம் செய்யப்பட்டது. இதைக் காண அதிகளவிலான பக்தர்கள் கோயிலில் திரண்டனர். நேற்று மாலை அம்மன் புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். பின்னர் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரோட்டத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.