சபரிமலை ஐயப்பன் கோயில் புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் தமிழ் மாத பூஜைகளுக்காக ஒவ்வொரு மாதமும் நடை திறக்கப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
அதன்படி, இம்மாதம் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடையை, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனாரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நேற்று மாலை 5.00 மணிக்கு திறந்து வைத்தார்.
இரவு 10.00 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு, மீண்டும் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் நடைபெற்றது.
மாலை 6.00 மணிக்கு தீபாராதனை புஷ்பாபிஷேகம் போன்றவை நடைபெறும். சிறப்புப் பூஜைகளுக்கு பின் 21-ம் தேதி இரவு 10.30 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.