திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வெள்ளிக்கிழமை வாகனம் ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது .
ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் 2 டன் வரை எடை தாங்கக் கூடிய வாகனம் ஒன்றை வெள்ளிக்கிழமை திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை அந்நிறுவனத்தினர் திருப்பதி ஏழுமலையானை வழிபட்டனர். தொடர்ந்து, ஏழுமலையான் கோயில் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில், வாகனத்துக்கு பூஜைகள் நடத்தி, தேவஸ்தானத்துக்கு ஆந்திர போக்குவரத்துத் துறை மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் வெங்கட்ராமய்யா முன்னிலையில் நன்கொடையாக வழங்கப்பட்டது. தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி, தேவஸ்தானம் சார்பில் வாகனத்தின் சாவி மற்றும் ஆவணங்களைப் பெற்றுக் கொண்டார்.
பின்னர் அமைச்சர் கூறுகையில், ஏழுமலையான் சேவைக்கு வாகனம் அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திருமலையில் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உத்தரவுப்படி 150 முதல் 200 மின்சாரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்சாரப் பேருந்துகளால், திருமலையில் சுற்றுச்சூழல் மாசு குறைய வாய்ப்புள்ளது என்றார்.