புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அமைந்துள்ள கோபிநாத சுவாமி கோயிலில் மூலவர் கோபிநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேபோல் உற்சவருக்கு, பக்தர்கள் சார்பில் வழங்கப்பட்ட பால், தயிர், நெய், பன்னீர், இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.
இதேபோல், தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயில், குஜிலியம்பாறை ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் கோயில், வடமதுரை சௌந்தரராஜப் பெருமாள் கோயில், சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயில்களான லக்குமி நாராயணப் பெருமாள் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில், வேணுகோபாலசுவாமி கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலையில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு நகைகள், மாலைகள் சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமிக்கு மல்லிகை, துளசி மாலைகளை சார்த்தி பக்தர்கள் வழிபட்டனர்.
அனைத்து பெருமாள் கோயில்களிலும் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.