திருமலையில் சிறுத்தை நடமாட்டம்

திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகை அருகில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.


 திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகை அருகில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
 திருமலையில் தற்போது கனமழை பெய்து வருவதால் வன விலங்குகள் ஊருக்குள் வரத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், திங்கள்கிழமை மாலை திருமலையில் உள்ள ஹரிஹர நிவாஸ் விருந்தினர் மாளிகை அருகில் சிறுத்தை ஒன்று நடமாடுவதைப் பார்த்த ஊழியர்கள் இதுகுறித்து தேவஸ்தான வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சிறுத்தையின் கால் தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை அறிந்த வனத் துறையினர் அதை வனத்துக்குள் துரத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்குப் பின் சிறுத்தை அடர்ந்த வனத்துக்குள் விரட்டியடிக்கப்பட்டது.

உண்டியல் காணிக்கை ரூ. 3.04 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ. 3.04 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
 திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அவற்றை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 3.04 கோடி வருவாய் கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.18.45 லட்சம் நன்கொடை
 திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 15.45 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம், பர்ட் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம், கோ சம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ.. 18.45 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

88,789 பக்தர்கள் தரிசனம் 
 ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 88,789 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 28,589 பேர் முடி காணிக்கை செலுத்தினர். திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறையில் 5 அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அவர்கள் 4 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசித்தனர். நேர ஒதுக்கீடு டோக்கன், ரூ. 300 விரைவு தரிசனம், திவ்ய தரிசன பக்தர்கள் 3 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்துத் திரும்பினர். 
ஞாயிற்றுக்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 12,760 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 9,585 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 22,320 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 2,242 பக்தர்களும், கபிலேஸ்வர சுவாமி கோயிலில் 3,167 பக்தர்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடர்புத் துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.

சோதனைச் சாவடியில் ரூ. 2.28 லட்சம் கட்டண வசூல்
அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 90,478 பயணிகள் சோதனைச் சாவடியைக் கடந்துள்ளனர். 9,998 வாகனங்கள் சோதனைச் சாவடியை கடந்து சென்றுள்ளன. அவற்றின் மூலம் ரூ. 2.28 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ. 15,389 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com