ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றுப் படித்துறையில் புரட்டாசி அமாவாசையையொட்டி சனிக்கிழமை அதிகாலை முதலே ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதனால் காவிரியாற்றில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இந்துக்கள் அனைவரும் தங்களது முன்னோர்களுக்கு மாதம் தோறும் வரும் அமாவாசையில் திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்த அமாவாசைகளில் மிகப்பெரிய அமாவாசையாக புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையாக கருதப்படுகிறது.
நிகழாண்டில் சனிக்கிழமையில் வந்துள்ள புரட்டாசி அமாவாசை 1999 ம் ஆண்டுக்குப் பிறகு 20 ஆண்டுகள் கழித்து புரட்டாசி சனிக்கிழமையில் அமாவாசை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த அமாவாசைக்குக் கூடுதல் சிறப்பு.
அம்மா மண்டபம் படித்துறையில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வந்து படித்துறையில் அமர்ந்து உள்ள புரோகிதர்கள் முன்னிலையில் தங்களது முன்னோர்கள் நினைத்து பூஜை செய்து திதி(தர்ப்பணம்) கொடுத்து வழிபட்டனர்.
பின்னா் ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். தற்போது காவிரியாற்றில் தண்ணீா் அதிகமாக செல்வதால் கூடுதல் பாதுகாப்பு போடபட்டுயிருந்தது. ஆற்றுக்குள் தீயணைப்பு துறையினர் யாரும் நடு ஆற்றில் இறங்காமல் பாதுகாத்தனர். கூட்டம் அதிகமான காரணத்தால் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுயிருந்தது.