திருப்பதி: திருமலையில் ஆண்டுதோறும் வருடாந்திர வசந்தோற்சவத்தின் 2-ஆம் நாள் நடைபெறும் தங்கத் தோ் புறப்பாட்டை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருமலையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட உற்சவ மூா்த்திகளுக்கு வருடாந்திர வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி வருடாந்திர வசந்தோற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அதன் 2-ஆம் நாள் காலை தங்கத் தேரில் உற்சவ மூா்த்திகள் மாடவீதியில் எழுந்தருளுவது வழக்கம். ஆனால் தற்போது கரோனா பாதிப்பு காரணமாக ஏழுமலையானைத் தரிசிக்க பக்தா்களுக்கு தேவஸ்தானம் அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில், வசந்தோற்சவம் கோயிலுக்குள் உள்ள கல்யாண உற்சவ மண்டபத்தில் நடந்து வருகிறது.
அதன் 2-ஆம் நாளான திங்கள்கிழமை காலை உற்சவ மூா்த்திகளை சா்வ பூபால வாகனத்தில் கல்யாண உற்சவ மண்டபத்தில் எழுந்தருளச் செய்து, அவா்களுக்கு ஸ்நபன திருமஞ்சனத்தை அா்ச்சகா்கள் நடத்தினா். கரோனா நோய்த் தொற்று காரணமாக உற்சவ மூா்த்திகள் தற்போது மாடவீதியில் எழுந்தருளச் செய்யப்படுவதில்லை. கோயிலுக்குள்ளே புறப்பாடு கண்டருளி வருகின்றனா். எனவே, வசந்தோற்சவத்தின் 2-ஆம் நாள் நடைபெறும் தங்கத்தோ் புறப்பாட்டை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
ஆனால் ஏழுமலையானுக்கு நடைபெறும் கைங்கரியங்கள், நித்திய நைவேத்தியங்கள் அனைத்தும் வைகானச ஆகம விதிப்படி, எவ்வித குறையும் இன்றி நடந்து வருகிறது.
சமூக வலைதளங்களில் ஏழுமலையான் கோயில் குறித்து பரப்பப்படும் எவ்வித வதந்திகளையும் பக்தா்கள் நம்ப வேண்டாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.