ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி எட்டாம் நாள் விழாவில் சாயசவுரி கொண்டை முத்துச்சர அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சியளித்தார்.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து எட்டாவது நாளான செவ்வாய்க்கிழமை ஸ்ரீநம்பெருமாள் சாயசவுரி கொண்டை முத்துச் சரம், அரநெல்லிக்காய் மாலை, வைர அபயஹஸ்தம், பவள மாலை, வைர நெத்தி பட்டை, கீர்த்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு திருவாபரணங்கள் சூடியபடி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும் விழா நாள்களில் நம்பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி சேவை சாதிக்கிறாா். பகல் பத்தின் கடைசி நாளான 24 ஆம் தேதி நாச்சியாா் திருக்கோலம் என்னும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி தருகிறாா்.
தொடா்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான 25 ஆம் தேதி முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு அதிகாலை 4.45-க்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பக்தா்கள் கரோனா கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படவுள்ளனா்.
விழாவையொட்டி கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்கின்றனா்.