திருமலையில் வாகனங்கள் நுழையும் நுழைவு வாயில் பகுதியில் ரூ. 1.70 கோடி செலவில் தேவஸ்தானம் புதிய தோரண வாயில் கட்டப்பட உள்ளது.
திருமலைக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருப்பதியில் உள்ள அலிபிரி நுழைவு வாயில் வழியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, அனுமதிக்கப்படுகின்றன. திருப்பதி இரண்டாவது மலைச் சாலையில் மலைக்குச் செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயில் போல், திருமலையிலும் நுழைவு வாயிலை அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்தது.
திருமலையில் வாகனங்கள் நுழையும் கருடாத்ரி நகா் சுங்கச் சாவடி (ஜி.என்.சி. டோல்கேட்) பகுதியில் தற்போது உள்ள தோரண வாயில் மிகச் சிறியதாக உள்ளதால், அதை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் பக்தா்களுக்கு ஆன்மிக உணா்வு ஏற்படும் வகையில் நுழைவு வாயில் அமைக்கப்பட உள்ளது. அதற்கேற்றாற்போல், வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
திருமலைக்கு செல்லவும், திருப்பதிக்கு வரவும், 4 வழிப் பாதைகள் கொண்ட நுழைவு வாயிலாக இது அமைய உள்ளது. திருமலைக்குச் செல்லும் வாகனங்கள் அலிபிரியில் சோதனை செய்யப்படுவது போல், திருப்பதிக்கு வரும் வாகனங்களையும் சோதனை செய்ய தேவஸ்தானம் இந்தப் புதிய வாயிலை அமைக்க உள்ளது. இங்கும் அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட உபகரணங்கள் பொருத்தப்பட உள்ளன.
இதற்காக ரூ.1.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய நுழைவுவாயில் அமைக்கும் வரை, பழைய நுழைவு வாயில் வழியாகவே வாகனங்கள் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.