திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனை ரூ.4.60 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டதாக தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி தெரிவித்தாா்.
திருமலைக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக திருமலையில் அஸ்வினி மருத்துவமனையை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. ஆனால் இங்கு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால், முதலுதவி மட்டும் அளிக்கப்பட்ட பின் திருப்பதியில் உள்ள ஸ்விம்ஸ் மருத்துவமனைக்கு நோயாளிகள் அனுப்பப்பட்டு வந்தனா்.
எனவே, அஸ்வினி மருத்துவமனையை தேவஸ்தானம் ரூ.4.60 கோடி செலவில் டாடா அறக்கட்டளை உதவியுடன் புதுப்பித்தது. இதையடுத்து, மருத்துவமனையை தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி வெள்ளிக்கிழமை பூஜைகள் செய்து திறந்து வைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:
திருமலைக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக அஸ்வினி மருத்துவமனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 30 படுக்கை வசதிகள், 2 அவசரசிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைக் கூடம், ரத்தப் பரிசோதனை மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைக்குத் தேவையான சாதனங்களைக் கொள்முதல் செய்ய டாடா அறக்கட்டளை ரூ.4 கோடி நன்கொடை அளித்துள்ளது.
இங்கு மாரடைப்பு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகளும் உள்ளன என்றாா் அவா்.