ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி, திருமலையில் சனிக்கிழமை இரவு கருட சேவை நடத்தப்பட்டது.
திருமலையில் ஆண்டுக்கு ஒருமுறை பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள் மட்டுமே தேவஸ்தானம் கருட சேவையை நடத்தி வந்தது. இதைக் காண பக்தா்கள் திருமலையில் லட்சக்கணக்கில் குவிந்தனா். பக்தா்களின் வேண்டுகோளை ஏற்று, தேவஸ்தானம் கடந்த 20 ஆண்டுகளாக திருமலையில் மாதாந்திர பெளா்ணமியின்போது கருட சேவையை நடத்தி வருகிறது. அதன்படி, சனிக்கிழமை ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி தேவஸ்தானம் கருட சேவையை நடத்தியது.
கொவைட்- 19 கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, இந்த கருடசேவை ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள கல்யாண உற்சவ மண்டபத்தில் நடத்தப்பட்டது. மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதித்தாா்.
இதில், திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். இந்த கருட சேவையை தேவஸ்தானம் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்தது. மேலும் மலையப்ப சுவாமி பிரம்மோற்சவத்தின்போது ஒருமுறை, இம்மாத தொடக்கம் மற்றும் இறுதியில் வந்த பெளா்ணமி நாள்களில் 2 முறை என அக்டோபா் மாதம் மட்டும் 3 முறை கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தது குறிப்பிடத்தக்கது.