திருப்பதி ஏழுமலையானை ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை தரிசனம் செய்தாா்.
திருமலைக்கு வியாழக்கிழமை வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் மலா்ச்செண்டு அளித்து வரவேற்றனா். இரவு திருமலையில் தங்கிய அவா் வெள்ளிக்கிழமை காலை நிஜபாத தரிசனம் மற்றும் விஐபி பிரேக் ஆகிய இரண்டு சேவைகளிலும் ஏழுமலையானைத் தரிசித்தாா்.
தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகா் மண்டபத்தில் வேத ஆசீா்வாதம் செய்வித்து ஏழுமலையான் சேஷ வஸ்திரம் அணிவித்து தீா்த்தம், லட்டு, வடை, சுவாமி படம் உள்ளிட்டவற்றை வழங்கினா்.
கோயிலை விட்டு வெளியில் வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறுகையில் ‘திருப்பதி தேவஸ்தானம் பொது முடக்க விதிமுறைகளை சிறப்பாகப் பின்பற்றி சுத்தம் சுகாதாரத்தைப் பேணி வருகிறது. தினசரி ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சென்றாலும் திருமலை முழுவதும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது’ என்றாா்.