திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத ஹோம மகோற்சவத்தின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நவகிரக ஹோமம் நடத்தப்பட்டது.
காா்த்திகை மாதத்தையொட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிா்வகிக்கும் இக்கோயிலில் உள்ள மூா்த்திகளுக்கு ஹோம மகோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை கணபதி, சுப்பிரமணியா் ஹோமங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோயில் வளாகத்தில் சனிக்கிழமை நவகிரக ஹோமம் நடத்தப்பட்டது. இதற்காக கோயில் மண்டபத்தில் நவகிரகங்களை எழுந்தருளச் செய்த குருக்கள், கலச ஸ்தாபனம், மகாசாந்தி அபிஷேகம், நவகிரக கலசாபிஷேகம் உள்ளிட்டவற்றை நடத்தினாா். பொது முடக்க விதிகளின்படி, தனிமையில் நடத்தப்பட்ட இந்த வழிபாட்டில் கோயில் அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா். ஞாயிற்றுக்கிழமை கோயிலில் கால பைரவா் ஹோமம் நடைபெறவுள்ளது.