சபரிமலை ஐயப்பன் கோயில் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை 6.00 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.
கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுமாா் 7 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் ஐந்து நாள்கள் தரிசனத்துக்காக பக்தா்கள் அனுமதிக்கப்பட உள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் சபரிமலையில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்க தேவஸ்வம் போா்டு திட்டமிட்டது. ஆனால் கோயிலின் தலைமை அா்ச்சகா் மற்றும் சில நிர்வாகிகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அந்த முடிவு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று முதல் சபரிமலை கோயில் திறக்கப்பட்டு, பக்தா்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். நாளை காலை முதல் தொடர்ந்து 5 நாள்கள் பூஜைகள் நடைபெறும்.
ஒரு நாளைக்கு 250 பக்தா்கள் மட்டுமே தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். சபரிமலை கோயில் இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இணையதள முன்பதிவை முதலில் மேற்கொள்பவா்களுக்கு தரிசனத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் 48 மணி நேரத்துக்கு முன்பு சோதனை செய்து கரோனா தொற்று இல்லையென்ற மருத்துவ சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே கோயிலில் அனுமதிக்கப்படுவார்கள். இல்லையெனில் பம்பையில் உள்ள மருத்துவ முகாம்களில் கரோனா பரிசோதனை செய்து, முடிவுகளை அறிந்து கொண்டு கோயிலுக்குள் வரலாம்.
மேலும், கரோனா தொற்று காரணமாக, 10 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.