ராகு-கேது பெயர்ச்சியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
நவக்கிரகங்களில் சாயா கிரகங்களான ராகுவும், கேதுவும் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி பெயர்ச்சியடைவார்கள்.
அந்தவகையில், சாரிவரி வருடம், ஆவணி 16-ம் தேதியான இன்று மதியம் 2.16க்கு தனுசு லக்னத்தில் ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து - ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சியடைந்தார்.
இதையொட்டி, கும்பகோணம், திருநாகேஸ்வரத்தில் உள்ள நவக்கிரக தலங்களில் ஒன்றான நாகநாத சுவாமி திருக்கோயிலில் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பெயர்ச்சியையொட்டி கடந்த 30-ம் தேதி லட்சார்ச்சனை தொடங்கி, தொடர்ந்து நேற்றும் நான்கு கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இன்று நடைபெற்ற ராகு பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், பரிகாரத் தலங்களான திருப்பாம்புரம், திருவாலங்காடு, திருச்செங்கோடு போன்ற தலங்களில் இராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.