ராகு-கேது பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?

பலரும் பல விஷயங்களில் ஏதாவது மாற்றம் வராதா என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், 2020-ஆம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி நேற்று நடைபெற்றது.
ராகு - கேது பெயர்ச்சி
ராகு - கேது பெயர்ச்சி

இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் இப்படி? ஏதாவது மாற்றம் வராதா என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், 2020-ஆம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி நேற்று நடைபெற்றது. பெயர்ச்சியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. 

கரோனா பொது முடக்கத்தால் தமிழகத்தில் உள்ள கோயில்கள் முழுவதும் கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்ததை அடுத்து, நேற்று திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட முதல் நாளே பல்வேறு ஆராதனைகள், குறிப்பாக நவக்கிரங்களில் நிழல் கிரகங்களான ராகு-கேதுவுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 

சாயா கிரகங்களான ராகுவும், கேதுவும் ஒன்றரை ஆண்டுகளுக்கு அதாவது 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி பெயர்ச்சியடைவார்கள். மனிதர்களின் கர்மவினைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு தோஷங்களையும் பலன்களையும் தந்து பாவச்சுமைகளை அகற்றும் புண்ணிய மூர்த்திகள் ஆவர். 

ஒருவர்  ஜாதகத்தில் அல்லது அம்சத்தில் ராகு-கேது நல்ல இடங்களில் இருந்தால் ராகு அளப்பரிய செல்வத்தை அளிப்பார். அதேபோல் கேது நல்ல அறிவினையும் சிறந்த செயலில் ஈடுபடும்படி வழிகாட்டுவார் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

யார் அந்த ராகு-கேது?

ராகுவும் கேதுவும் சகோதரர்களாவர். ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன்(குரு), வெள்ளி(சுக்கிரன்), சனி ஆகியவை பிரதான கிரகங்கள். ராகு-கேது இரண்டும் சாயா(நிழல்) கிரகங்கள். ராகு-கேது பற்றி பல்வேறு புராணக் கதைகள் உள்ளன.

ராகுவும் கேதுவும் செய்த தவவேள்விகளால் மகிழ்ந்த பரமேஸ்வரனும், விஷ்ணுவும், நவக்கிரக பரிபாலனம் செய்யும் பாக்கியத்தை, அந்தஸ்தை அவர்களுக்கு அளித்தனர். ஒருவரது முன் ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு-கேது வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அவரவர் செய்த வினைப்பயன்படி ஜாதகத்தில் ராகு-கேது அமர்வார்கள்.

இருவரும் அவரவர் தசை மற்றும் பிற கிரக தசையின் புக்திகளில் யோக, அவயோக பலன்களை அளிக்கும் வல்லமை பெற்றவர்கள். மற்ற ஏழு கிரகங்கள் போல ராகு-கேதுவுக்கு சொந்தவீடு, உச்சவீடு, நீச்சவீடு என்று கிடையாது என்று சொல்வதுண்டு.  ஆனால் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த கிரகங்களுக்கு உண்டு. அது என்னவென்றால், இவர்கள் எந்த வீட்டில் இருக்கிறார்களோ அவர்களது ஆதிபத்தியத்தை நமக்குக் கொடுப்பார்கள். உதாரணமாக ஜனன கால ஜாதகத்தில் மேஷ ராசியில் ராகு இருக்கிறார் என்றால் அவர் மேஷ ராசியின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிபத்தியத்தை எடுத்துக் கொள்வார். 

ராகு-கேது பெயர்ச்சி - 2020

நிகழும் மங்களகரமான ஸ்ரீசார்வரி ஆண்டு ஆவணி மாதம் 16ம் தேதியும், செப். 01, 2020 செவ்வாய்க்கிழமை, மதியம் 2.16க்கு தனுசு லக்னத்தில் ராகு பகவான் மிதுன ராசியின் மிருகசீரிஷம் நட்சத்திரம் மூன்றாம் பாதத்திலிருந்து, ரிஷப ராசியின் மிருகசீரிஷம் இரண்டாம் பாதத்திற்குப் பெயர்ச்சியடைந்தார். அதுபோன்று, கேது பகவான் தனுசு ராசி மூலம் 1-ம் பாதத்திலிருந்து, விருச்சிக ராசியின் கேட்டை நட்சத்திரம் 4-ம் பாதத்திற்குப் பெயர்ச்சியடைந்தார். 

பெயர்ச்சியால் யாருக்கு அதிர்ஷ்டம்?

கடந்த வருடம் இராகு கேது பெயர்ச்சியானது 14.02.2019 அன்று நிகழ்ந்தது. இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவரவருக்கு ஏற்றப் பலன்களையும், பிரச்னைகளையும் சந்தித்திருப்பார்கள். அதே போன்று இந்த வருடம் 01.09.2020-இல் இராகு கேது மீண்டும் பெயர்ச்சி அடைந்திருக்கின்றனர். 

ராகுவும், கேதும் பின்னோக்கிச் சென்று பெரும்பலனை நமக்கு அள்ளித் தந்தால் தான் நாம் வாழ்வில் முன்நோக்கிச் செல்ல முடியும். ஒருவருடைய ஜாதகத்தில் ராகு பலம் பெற்று அமைந்தால் அவர்களுக்கு ராகு பலன்களை அள்ளிக் கொடுப்பார். அவர்கள் நல்ல பொருளாதார நிலையை அடைவார்கள். அதுபோன்று ஒருவர் ஜாதகத்தில் கேது பலம் பெற்று அமைந்தால் நல்ல அறிவாற்றல் கிடைக்கும்

ஒருவர் ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் ராகு கேது இருந்தால் திருமணத்தடை, புத்திர பாக்கிய தடை, குடும்ப ஒற்றுமை குறைவு போன்றவை ஏற்படும்.

இந்த ராகு கேது பெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் பலவிதமான பலன்கள் இருக்கும். இந்த ராகு-கேது பெயர்ச்சியால் நன்மையடையும் ராசிகள், மத்திய பலன் பெறும் ராசிகள், பரிகாரம் செய்யவேண்டிய ராசிகள் எவை எவையென்று தெரிந்துகொள்வோம். 

ராகு கேது பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள்: 

ரிஷபம் - கடகம் - கன்னி - விருச்சிகம் - மகரம்

இந்த ராசிக்காரர்கள் அனைவருக்கும் பாராட்டு, நினைத்த காரியங்கள் எளிதில் கைகூடல், நல்ல தொழில் என அனைத்து வகையிலும் முன்னேற்றம் காண்பார். இதுவரை இருந்த பிரச்னைகள் நீங்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.

பெயர்ச்சியால் மத்திம பலன் அடையும் ராசிகள்:

மிதுனம் - சிம்மம் - தனுசு - கும்பம் - மீனம்

இவர்களுக்கு நினைத்த காரியங்கள் பல்வேறு தடை, தாமதங்களுக்குப் பிறகு நிறைவேறும். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பதால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். 

பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்:

மேஷம் - துலாம்

இந்த ராசிக்காரர்கள் தெய்வ சன்னதிகளுக்குச் சென்று வழிபட்டு வந்தால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நாள் பார்த்து வழிபட்டால் கோள்கள் கூட நற்பலன்களைத் தர வாய்ப்புள்ளது.

வழிபாட்டுத் தலங்கள்:

திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், திருவாலங்காடு, திருச்செங்கோடு போன்ற தலங்களில் இராகு, கேதுவை முறையாக வழிபட்டு வாழ்க்கையில் வளம் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com