அக்டோபா் மாதத்துக்கான ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் சனிக்கிழமை (செப். 26)) காலை 11 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவுக்காக வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலையில், கொவைட் 19 விதிமுறைகளுக்காக கடந்த மாா்ச் 18-ஆம் தேதி முதல் ஆா்ஜித சேவைகள், தரிசனங்கள் உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் ரத்து செய்தது. ஆனால், ஏழுமலையானுக்கு நடத்தப்படும் தினசரி கைங்கரியங்கள் வழக்கம் போல் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் மிகக் குறைந்த எண்ணிக்கையில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். அதற்காக தேவஸ்தானம் இணையதளம் மூலம் விரைவு தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, அக்டோபா் மாதத்துக்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் சனிக்கிழமை (செப். 26) காலை 11 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
தற்போது, தினமும் 13 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவில் வைக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.