கஷ்டங்கள் அனைத்தும் விலகப்போகுது இந்த ராசியினருக்கு: வாரப் பலன்கள்

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (ஏப்ரல் 02 - ஏப்ரல் 08) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 
கஷ்டங்கள் அனைத்தும் விலகப்போகுது இந்த ராசியினருக்கு: வாரப் பலன்கள்

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (ஏப்ரல் 02 - ஏப்ரல் 08) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தொலைதூரத்திலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று வந்து சேரும் காலமிது. குடும்பத்தில் சற்று மருத்துவச் செலவுகள் கூடும். பெற்றோர்களின் ஆரோக்கியம் சீராக இராது. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் மனதில் சில பிரச்னைகள் வந்து மோதும். எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் தங்களுக்குரிய பணிகளில் கவனம் செலுத்துங்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபமடைவீர்கள். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். விவசாயிகள் பழைய குத்தகை பாக்கிகளைச் சரியாகத் திருப்பிச் செலுத்துங்கள். நீர்வரத்தினால் புதிய பயிர்களை உற்பத்தி செய்து பலன் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். கட்சி மேலிடத்தில் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினர் முக்கிய பயணங்களைத் தகுந்த பாதுகாப்புடன் மேற்கொள்வீர்கள். தங்களுடைய திறமையால் ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். 

பெண்மணிகளுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வருமானத்தில் ஏற்ற இறக்கங்களைக் காண்பீர்கள். மாணவமணிகளுக்கு தேர்வில் நீங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலான மதிப்பெண்கள் கிட்டும். உங்கள் முயற்சிகளைக் கை விடாதீர்கள்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 03, 05. 

சந்திராஷ்டமம்: 02.


ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

உங்களின் மன உறுதி அதிகரிக்கும். மற்றபடி கணவர் வழியில் சிறிது மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். நீங்கள் நினைத்த காரியங்களில் சற்று தடங்கல் ஏற்படும். நண்பர்களுடன் இணைந்து செயல்படுவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் அனைவரிடமும் கண்டிப்புடன் நடந்து கொள்ளாதீர்கள். வார்த்தைகளில் கரிசனம் காட்டுங்கள். வியாபாரிகள் புதிய கடன்களை வாங்கி வியாபாரத்தைப் பெருக்காதீர்கள். பழைய கூட்டாளிகளை விட்டுப் பிரிந்து தனித்தே தொழில் நடத்துங்கள். விவசாயிகள் கையிருப்புப் பொருள்களைச் சேர்த்து வைக்காமல், சந்தையில் விற்று விடுங்கள் லாபம் பெருகும். 

அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் திருப்திகரமாக செயல்படுங்கள். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழும். கலைத்துறையினர் எதிர்வரும் வாய்ப்புகளை துணிந்து ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் திறமையை நிரூபிப்பதற்குச் சவாலாகவே அமையும். 

பெண்மணிகளுக்கு கணவருடன் பரஸ்பரம் அன்பு நீடிக்கும். தோல் சம்பந்தமான நோய்களிலிருந்து விடுபடுவீர்கள். மாணவமணிகள் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு உழைக்கவும். கல்வியில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: வேங்கட நாதனை வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 02, 05. 

சந்திராஷ்டமம்: 03, 04.


மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உடல் உபாதைகள் நீங்கி புத்துணர்வுடன் திகழ்வீர்கள். தல யாத்திரைகளையும், குடும்பத்துடன் மேற்கொள்வீர்கள். வருமானம் சீராக இராது. செலவுகள் அதிகரிக்கும்.  
குடும்பத்தில் உறுப்பினர்கள் அதிகமாவார்கள். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். உழைப்பை நம்புங்கள். தகுந்த ஊதியம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் வெற்றி வாய்ப்புகள் சற்று குறைந்தே காணப்படும். போட்டிகளும் அதிகமாக இருக்கும். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்து லாபத்தைப் பெருக்கலாம். மகசூல் லாபம் நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகள் கவனத்துடன் பிரசாரத்தில் ஈடுபடுங்கள். பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு உற்சாகமளிக்கும். சிறிது சிரமத்திற்கு பிறகே வாய்ப்புகளைப் பெறுவீர்கள். 

பெண்மணிகள் உற்றார், உறவினர்களால் மிகுந்த மகிழ்ச்சியடைவீர்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. மாணவமணிகளின் கோரிக்கைகளை பெற்றோர்கள் உடனுக்குடன் நிறைவேற்றுவார்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் பாதுகாப்பாக ஈடுபடுங்கள்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 03, 08. 

சந்திராஷ்டமம்: 05, 06, 07.


கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பணத் தட்டுப்பாடு நீங்கும். கூட்டாளிகளுடன் சேர்ந்து புதிய முயற்சிகளைச் செயலாக்குவீர்கள். குழந்தைகள் உங்களை அனுசரித்து நடந்து கொள்வார்கள். நீண்ட நாள்களாக ஒதுக்கி வைத்திருந்த வேலைகளைச் செய்யத் தொடங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மீது மேலதிகாரிகளுக்கு இருந்த மனக்கசப்புகள் நீங்கும். நீண்ட நாளாக இருந்த பிரச்னைகள் குறையும். வியாபாரிகளுக்கு வரவேண்டிய கடன்கள் அனைத்தும் வசூலாகும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் நல்ல முறையிலேயே நடக்கும். விவசாயிகள் கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற பலனைப் பெறலாம். சிலருக்கு வழக்குகளால் மன உளைச்சல் இருப்பினும் முடிவு சாதகமாகவே அமையும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சி விஷயங்கள் நீங்கள் நினைத்த மாதிரியே முடியும். அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைத் தேடிப் பெறுவீர்கள். 

பெண்மணிகள் அனைவரையும் அன்புடன் பார்த்துக் கொள்வீர்கள். உடல் நலமும் சீராக இருக்கும். மாணவமணிகள் விடியற்காலையிலேயே விழித்துப் பாடங்களைப் படிக்க முயற்சி செய்யுங்கள்.

பரிகாரம்: நடராஜப் பெருமானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 03, 04. சந்திராஷ்டமம்: 08.


சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஸ்பெகுலேஷன் போன்ற துறைகளின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். மனதிலிருந்த பயம் நீங்கும். இல்லத்திற்கு அவசியமான உபகரணத் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைக் குறித்த நேரத்தில் முடித்துவிடுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். அதிக வருமானம் கிடைக்கும்.விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் உண்டு. புழு, பூச்சிகளின் பாதிப்பால் விளைச்சலின் அளவு குறையும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிக்கவும். உங்களின் அந்தஸ்தில் சிறிது குறைகள் ஏற்படலாம். கலைத்துறையினர் அதிகமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 

பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். செலவுகளைக் குறைத்துக் கொண்டு சேமிப்பைக் கூட்டுங்கள். மாணவமணிகள் விளையாட்டையே மூலதனமாக்காதீர்கள். கல்வி உயர்வுக்கு செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

பரிகாரம்: ஸ்ரீராமபிரானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 02, 06. 

சந்திராஷ்டமம்: இல்லை.


கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பூர்வீகச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி தெளிவு பிறக்கும். சமுதாயத்தில் உங்கள் பெயர், புகழ் கூடும். நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வருமானம் சற்று மேலோங்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணவரவுக்கு தடைகள் ஏற்படும். அலுவலக வேலைகளில் கவனத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரிகளுக்கு புதிய முதலீடுகளுக்கான முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும். விவசாயிகளுக்கு மகசூலில் சற்று லாபம் பார்ப்பீர்கள். நீர்வரத்து கணிசமாக இருக்கும். கால் நடைகளை நன்கு பராமரியுங்கள்.

அரசியல்வாதிகளைத் தேடி புதுப்புது பொறுப்பான வேலைகள் வந்து சேரும். அதே சமயம் சிக்கலான விஷங்களில் ஒதுங்கி இருக்கவும். கலைத்துறையினர் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சக கலைஞர்கள் மூலம் வாய்ப்புகளையும் பெறுவீர். 

பெண்மணிகளுக்கு கணவருடனான அன்பு பரஸ்பரம் மேலோங்கும். பல்வலி போன்ற உபாதைகள் ஏற்படும். மாணவமணிகள் கடுமையாக முயற்சி செய்தால் தடைகளை உடைத்து வெற்றி பெறலாம். படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: சரபேஸ்வரரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 04, 07. 

சந்திராஷ்டமம்: இல்லை.


துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்கிற நிலையில் பெரிய கஷ்டங்கள் மறையும். பயணங்களால் நன்மை உண்டாகும். ஸ்பெகுலேஷன் போன்ற துறைகளால் பலன் ஏற்படாது. வரவும் செலவும் சமமாக இருக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு பணவரவு சீராக இருக்கும். மேலதிகாரிகளின் பேச்சைக் கேட்டு நடக்கவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் லாபகரமாக முடியும். உங்களின் முதலீடுகள் வெற்றி தரும். விவசாயிகள் போட்டிகளுக்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். மகசூலில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பார்வையில் படுவீர்கள். எந்த காரியத்திலும் சற்று கவனித்து நடந்து கொள்ளவும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வருவது சற்று கடினமாக இருக்கும். சக கலைஞர்கள் உங்களுக்கு சற்று உதவுவார்கள்.

பெண்மணிகள் செலவுகளைக் குறைத்துக் கொண்டு சேமிப்பு விஷயங்களில் அக்கறை எடுங்கள். கணவன் மனைவி அன்யோன்யம் நீடிக்கும். மாணவமணிகள் கல்வி உயர்வுக்கு செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். விளையாட்டிலும் ஈடுபடுங்கள்.

பரிகாரம்: இஞ்சிமேடு பெருந்தேவித் தாயாரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 05, 07. 

சந்திராஷ்டமம்: இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பொது சேவைகளிலும் ஈடுபடுவீர்கள். இல்லத்தில் புத்திர பாக்கியம் உண்டாகும். அனைத்துச் செயல்களிலும் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். 

உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். எதிர்வரும் இடையூறுகளைச் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். 

வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்தி லாபத்தைப் பெருக்குவீர்கள். 
வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். விவசாயிகள் அமோகமான விளைச்சலைக் காண்பீர்கள். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். 

அரசியல்வாதிகள் போராட்டங்களில் புதிய வேகத்துடன் ஈடுபடுவீர்கள். வாக்குவாதங்கள் கட்சியில் அதிகரிக்கும். கலைத்துறையினர் புதிய சாதனைகள் செய்வீர்கள். அதனால் பெயரும் புகழும் அதிகரிக்கும். பெண்மணிகளுக்கு கணவரிடம் பரஸ்பரம் அன்பு அதிகரிக்கும். மனதிற்கினிய செய்திகளைக் கேட்பீர்கள். 

மாணவமணிகள் படிப்பில் இடையூறுகள் வந்தாலும் சமாளிப்பீர்கள். ஈடுபாட்டுடன் பாடங்களைப் படித்தால் உரிய மதிப்பெண்கள் கிடைக்கும்.

பரிகாரம்: கந்தன்குடி முருகரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 02, 08. 

சந்திராஷ்டமம்: இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

மனதிற்கு இனிமையான செய்திகள் உங்களைத் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் நண்பர்களுடன் ஏற்பட்ட வீண் மனத்தாங்கல்கள் விலகும். அவர்களுடன் இணைந்து புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுடன் ஊதிய உயர்வும் கிடைக்கும். எவரையும் நம்பி எதையும் மனம்விட்டு பேசாதீர்கள். வியாபாரிகள் புதிய கடைகளைத் திறந்து வியாபாரத்தை அபிவிருத்தி செய்யலாம். 

தடைகளும் எதிர்ப்புகளும் நீங்கும். விவசாயிகள் தங்கள் கையிருப்புப் பொருள்களை பத்திரமாக, தக்க வைத்துக் கொள்ளுங்கள். புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம்.

அரசியல்வாதிகளின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். தொண்டர்களின் ஆதரவுக்கும், அன்புக்கும் பாத்திரமாவீர்கள். 

கலைத்துறையினர் நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சக கலைஞர்களை அனுசரித்து நடக்கவும். 

பெண்மணிகள் குடும்பத்தில் மருத்துவச் செலவு அதிகரிக்கும். வருமானம் வந்தாலும் செலவுகளும் அதிகமாகும். மாணவமணிகள் பெற்றோர், ஆசிரியரின் அறிவுரையைக் கேட்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள். 
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 03, 08. 

சந்திராஷ்டமம்: இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். கூட்டாளிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள்.  செய்தொழிலை சிரமமின்றி நடத்துவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். சமுதாயத்தில் கௌரவமான பதவிகளைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் உழைப்பிற்குத் தகுந்த ஊதியத்தைப் பெறுவீர்கள். அனைத்து வேலைகளையும் நன்கு திட்டமிட்டு முடிக்கவும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் லாபத்தைக் காண்பீர்கள். புதிய வழிகளில் வியாபாரத்தைப் பெருக்க முனைவீர்கள். விவசாயிகள் வாய்க்கால், வரப்பு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்கவும். 

அரசியல்வாதிகளின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். தொண்டர்களின் உழைப்பினால் சந்தோஷம் அடைவீர்கள். கலைத்துறையினருக்கு இது ஒரு மகிழ்ச்சியான காலகட்டமாகவே இருக்கும். சக பணியாளர்களும் மிகுந்த ஒத்துழைப்பு தருவார்கள்.

பெண்மணிகள் கணவருடனான ஒற்றுமையில் சிறிது வேறுபாடு இருந்தாலும் அனுசரித்து, ஒற்றுமையாக இருங்கள். மாணவமணிகள் நண்பர்களைத் தேர்ந்தெடுத்துப் பழகவும். ஊர் சுற்றாமல், நல்ல விஷயங்களைத் தேர்ந்தெடுத்து அதில் கவனம் செலுத்துங்கள்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 04, 05. 

சந்திராஷ்டமம்: இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் குதூகலம் பூத்துக் குலுங்கும். செய்தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும் காலமிது. பணவரவும், அந்தஸ்தும் கூடும். உங்களின் உடல் நிலையும், மனவளமும் உற்சாகத்துடனும், தெளிவுடனும் இருக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வருமானத்திற்கு எந்தக் குறையும் இருக்காது. மேலதிகாரிகள் ஆதரவாக இருக்க மாட்டார்கள். வியாபாரிகள் கடன் கொடுத்து வியாபாரம் செய்ய வேண்டாம். அவசியமான பொருள்களை மட்டுமே வாங்கி விற்பனை செய்வது உசிதம். விவசாயிகள் கால்நடைகளை நன்கு கவனித்து வந்தால் நல்ல லாபம் அடையலாம். மகசூல் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள், வாய்ப்பூட்டு அவசியம். தொண்டர்களை அனுசரித்து நடக்கவும். கலைத்துறையினர் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்திடுங்கள். சக கலைஞர்களுடனான உறவை புதுப்பித்துக் கொள்ளுங்கள். 

பெண்மணிகளுக்கு கணவர் மிகவும் அன்பானவராகவும், பண்பு மிக்கவராகவும் இருப்பார். அனைவருடனும் பரஸ்பரம் அன்பு பாராட்டுவீர்கள். மாணவமணிகள் நண்பர்களுடன் வீணாக நேரத்தை செலவழிக்காமல் உருப்படியான காரியங்களில் ஈடுபடவும். 

பரிகாரம்: சனீஸ்வரரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 06, 07. 

சந்திராஷ்டமம்: இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

சமுதாயத்தில் கௌரவமான பதவிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். கூட்டாளிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள். தைரியத்துடன் செய்தொழிலை சிரமமின்றி நடத்துவீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் நன்கு திட்டமிடுதல் அவசியம். உழைப்பிற்குத் தகுந்த ஊதியத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகள் எவரிடமும் கடன் கொடுத்து ஏமாறாதீர்கள். புதிய வழிகளில் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். 

விவசாயிகளுக்கு வரப்பு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவும். புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடுவது உத்தமம். அரசியல்வாதிகளின் திட்டங்கள் அனைத்துமே நிறைவேறும். மற்றவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். கலைத்துறையினர் சில நல்ல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வருமானம் சிறப்பாக இருப்பதால் நல்ல காரியத்துக்காகச் செலவிடுவீர்கள்.  

பெண்மணிகள் கணவருடன் அன்பு பாராட்டுவீர்கள். புதுவகையான ஆபரணங்களை வாங்குவீர்கள். மாணவமணிகள் தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள நேரிடலாம். தகுந்த நண்பர்களைத் தேர்ந்தெடுத்து பழகவும். 

பரிகாரம்: அம்பாளை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 07, 08. 

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com