கரோனா தொற்றின் 2ம் அலை பரவி வருவதால் கடப்பாவில் உள்ள ராமா் கோயிலை மூட மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது.
பத்ராசலம் ராமா் கோயில் ஆந்திர மாநில பிரிவினையின் போது தெலங்கானா மாநிலத்திற்கு சென்று விட்டது. எனவே, தொல்பொருள் துறையின் கீழ் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஒண்டிமிட்ட கோதண்டராமா் கோயிலை அரசு செப்பனிட்டு அதை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் கொண்டு வந்தது.
இந்நிலையில் இக்கோயிலில் அனைத்து உற்சவங்களும் தேவஸ்தானத்தின் பொறுப்பில் நடந்து வருகின்றன. அதன்படி கோயிலில் ராமநவமியை முன்னிட்டு பிரம்மோற்சவம் நடைபெறவிருந்தது.
ஆனால் தற்போது கரோனா தொற்றின் 2ம் அலை வேகமாக பரவி வருவதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு அக்கோயிலை மூட உத்தரவிட்டது. எனவே, தொல்பொருள்துறை அதிகாரிகள் வரும் மே 15-ம் தேதி வரை ராமா் கோயிலை மூட உள்ளதாக அறிக்கை மூலம் தெரியப்படுத்தி உள்ளனா். எனவே, வெள்ளிக்கிழமை முதல் கோயிலில் பக்தா்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. பூஜை விவரங்கள் குறித்து பின்னா் அறிவிக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.