கரோனா பரவல் எதிரொலியாக திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையையும் குறைக்க தேவஸ்தானம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கரோனா தொற்றால் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் மே மாதம் வரை ஏழுமலையானின் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆயினும் கோயிலில் கைங்கரியங்கள் தனிமையில் நடத்தப்பட்டன. அதன்பிறகு ஜூன் மாதம் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தா்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில் தற்போது கரோனா தொற்றின் 2-ஆம் அலை வேகமாகப் பரவி வருகிறது. ஆந்திர மாநிலத்தில் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.
எனவே, தேவஸ்தானம் கடந்த 12-ஆம் தேதி முதல் திருப்பதியில் அளிக்கப்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன்களை ரத்து செய்தது. தினசரி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டு வழங்கப்பட்டு வந்த டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டதால், தரிசனத்திற்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் அளிக்கப்படும் முன்பதிவு டிக்கெட்டுகளின் எண்ணிக்கையையும் குறைக்க தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
எனவே, வரும் மே மாதம் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவில் வெளியிடப்பட உள்ள டிக்கெட்டுகளின் எண்ணிக்கை மூலம் அதிகாரிகள் மேற்கொண்டுள்ள முடிவு தெரியவரும் என்று அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கிறது.