ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி விழா நான்காம் திருநாளான செவ்வாய்க்கிழமை காலை மூலஸ்தானத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்.
சவுரி தொப்பாரைக் கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு நம்பெருமாள் மிக அழகாகக் காட்சியளித்தார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், வைகுந்த ஏகாதசி பகல் பத்து நான்காம் நாளான செவ்வாய்க்கிழமை அர்ச்சுன மண்டபத்தில் சவுரி தொப்பாரைக் கொண்டை, இரத்தின அபயஹஸ்தம், பவளமாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள்.
மேலும் புகைப்படங்கள் - ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில்: பகல்பத்து நான்காம் நாள் உற்சவம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் பகல்பத்து நாளன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் எழுந்தருளும் நம்பெருமாளுக்கு வைரம், வைடூரியம், முத்து, பவளம் என பலவிதமான ஆபரணங்கள் அணிவிக்கப்படுகின்றன.
எத்தனை ஆபரணங்கள் அணிந்தாலும் அத்தனையிலும் அழகாய் காட்சியளிப்பார் நம்பெருமாள்.
வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் பரமபதவாசல் திறப்பன்று கருவறையிலிருந்து பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கியுடன் புறப்பட்டு சிம்மக்கதியில் வரும் நம்பெருமாளைத் தரிசிக்க திரளும் பக்தர்களே இதற்கு சாட்சியாகும்.
வைகுந்த ஏகாதசி விழாவின் நான்காம் திருநாளான இன்று, சவுரி தொப்பாரைக் கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு நம்பெருமாள் மிக அழகாகக் காட்சியளித்தார்.