ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி விழா ஐந்தாம் திருநாளான புதன்கிழமை காலை மூலஸ்தானத்திலிருந்து பாண்டியன் கொண்டை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் பகல்பத்து நாளன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் எழுந்தருளும் நம்பெருமாளுக்கு வைரம், வைடூரியம், முத்து, பவளம் என பலவிதமான ஆபரணங்கள் அணிவிக்கப்படுகின்றன.
வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் பரமபதவாசல் திறப்பன்று கருவறையிலிருந்து பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கியுடன் புறப்பட்டு சிம்மக்கதியில் வரும் நம்பெருமாளைத் தரிசிக்க திரளும் பக்தர்களே இதற்கு சாட்சியாகும்.
வைகுந்த ஏகாதசி பகல் பத்து ஐந்தாம் நாளான புதன்கிழமை அர்ச்சுன மண்டபத்தில் ரத்தன பாண்டியன் கொண்டை மார்பில் விமான பதக்கம் இரத்தின அபயஹஸ்தம், வைர அபயஹ்தம், வைர காப்பு பவளமாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, அடுக்கு பதக்கம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள்.
பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை ஏராளமான பக்தர்களுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.