ஜோதிடத்தில் எல்லாவற்றையும் சொல்லிவிடமுடியுமா?

ஜோதிடத்தில் ஒருவர் ஜாதகத்தைக் கணித்து முழுவதுமாக பலன் சொல்லிவிடமுடியுமா? முடியாதா என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். 
ஜோதிடத்தில் எல்லாவற்றையும் சொல்லிவிடமுடியுமா?

ஜோதிடத்தில் ஒருவர் ஜாதகத்தைக் கணித்து முழுவதுமாக பலன் சொல்லிவிடமுடியுமா? முடியாதா என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். 

ஜோதிடத்தில் பலன் காணும் முறைகளும், அதற்கான கால அவகாசங்களும்:-

ஒருவர் ஜோதிடம் பார்க்க ஜோதிடரிடம் வருவதாகக் கொள்வோம். எனக்குத் தெரிந்தவரை அனைத்து ஜோதிடர்களும் இவற்றைப் பின்பற்றியேதான் பலன்களைச் சொல்வார்கள். ஏனெனில், ஜோதிடத்தில் விதிகள் மற்றும் விதி விலக்குகளும் ஒன்றே. அதனை, அனைத்து ஜோதிடர்களும் அறிந்ததே. 

1. ஒரு ஜாதகர் அளித்த பிறப்பு குறிப்புகளின்படி, ஜாதகக் கட்டங்களை அமைத்து, அது ஆண் / பெண் ஜாதகமா என அறிதல்.

2. ராசி, அம்சம், சர்வாஷ்டக ஜாதக கட்டம் அமைத்தல்.

3. குலதெய்வம் சாதாரண அபிஷேக ஆராதனை செய்து கும்பிடும் தெய்வமா, குலதெய்வம், பலிகவர் தெய்வமா, குலதெய்வம், பொங்கல் வைத்து படையல் போடும் தெய்வமா என அறிதல்.

4. யோகாதிபதி, பாக்கியாதிபதி, ரோகாதிபதி, பாதகாதிபதி, மாரகாதிபதி அறிதல்.

5. D -16 எனும் சோதாம்ச சக்கரம் மூலம், ஜாதகர் அணியும் ஆடையின் நிறம், மற்றும் வண்டி / வாகன நிறம் அறிதல்.

6. யோகமான நட்சத்திரம் மற்றும் அவயோகமான நட்சத்திரம் அறிதல்.

7. அஸ்தங்கம், வக்கிரம், வர்கோத்தமம், உச்சம், நீச்சம் போன்ற கிரக நிலைகளை அறிதல்.

8. சர்வாஷ்டக நிலை அறிதல்... அறிந்து, பொதுவான ஜாதகர் குணாதிசயம், மற்றும் இப்பிறவியில் ஜாதகர், பெறும் நன்மை, தீமைகள் அறிதல். 

9. எந்தெந்த வருடங்கள் சிறப்பாக இருக்கும். எந்தெந்த வருடங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிந்து தெரிவித்தல்.

10. ஆணாக இருப்பின் பீஜ ஸ்புடம் மூலம், மலட்டுத் தன்மை அறிதல்.

11. பெண்ணாக இருப்பின் குழந்தை பெறும் நிலை உள்ளதா என, ஷேத்திர ஸ்புடம் மூலம் அறிதல்.

12. கிரகங்களின் ஷட்பலம் அறிதல்.

13. கிரகங்களின் சரியான, அவை வீற்றிருக்கும் பாகை அறிதல்.

14. கிரகங்கள் நிற்கும் நக்ஷத்திர பாத சாரங்கள் அறிந்து, அவற்றின் நவாம்ச நிலையை அறிதல்.

15. ஜாதகம் பார்க்கும்போதுள்ள,  கிரகங்களின் கோசார நிலை அறிதல்.

16. நடக்கும், தசை / புத்தி அறிந்து அவை, ஜாதகருக்கு சாதகமா அல்லது பாதகமா என அறிதல்.

17. பல்வேறு ஜோதிட விதிகளைக் கொண்டு, திருமணம் நேரம் அறிதல்.

18. கால சக்கரம் அமைப்பு மூலம், ஜாதகருக்குண்டான தெய்வ சாபம், மரண / கண்டம் தரும் கிரகங்களை அறிதல்.

19. கால சக்கரம் மூலம், ஜாதகர் பெறும் சிரமங்கள், அலைச்சல்கள் தரும் கிரகங்களை அறிதல்.

20. ஜாதகரை வழிநடத்தும், ஆத்மகாரர்கள் மற்றும் அமித்திய காரகர் அறிதல்.

21. லக்கினம் நிற்கும் த்ரேக்காண பலன் அறிதல்.

22. நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டா / இல்லையா என சதுர் ஸ்புடம் மூலம் அறிதல்.

23. இது தவிர, ஜாதகரின் கேள்விகளுக்கு ஏற்ப தகுந்த பதில் அளிக்க, ஜோதிட விதிகளை ஆராய்தல், பாவ தொடர்புகள் நிலை மூலம் அறிதல். மேற்சொன்ன அத்தனைக்கும் தேவையான பரிகார முறைகளை அளித்தல்.

இவ்வளவையும், கருத்தில் கொண்டு ஆய்வு செய்து பலன் அளிக்கக் கால தாமதம் நிச்சயம் ஆகும். இதனை அறியாமல், உடனடியாக பலன் சொல்லுங்கள் என்றால், நிச்சயம் சொல்ல முடியாது. அதாவது வேதகால ஜோதிடம் மூலம், உடனடியாக யாராலும் துல்லியமாகக்கூற முடியாது. நிச்சயம் கால அவகாசம் தேவைப்படும்.

அதனை ஜோதிடருக்கு ஜோதிடர் வேறுபடலாம். அவரவர்களின் ஜோதிட அறிவு, அனுபவ ஞானம் மற்றும் துல்லிய பலன் அளிப்பதற்காக தாமாகவே ஏற்படுத்திக்கொள்ளும் சிரமம் போன்ற காரணிகள் இதில் உள்ளடங்குவதால், காலநேரம் அதிகரிக்கவே செய்யும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதே ஜோதிடத்தின் அங்கமான நாடி, சோழி பிரசன்னம் போன்றவற்றில் உடனடியாகக் கூறினாலும், அவை ஒரு நேரம் மட்டும் தான் பலன் பெற இயலும். அடுத்த கேள்விக்கு சிறிது காலம் கழித்துத் தான் பலன் அறியமுடியும். எதிர்கால பலன்களை நிச்சயம் கூறமுடியாது. 

ஆனால், இந்த வேதகால ஜோதிட முறையில், துல்லியமாகவும், அதற்கேற்ப பரிகாரங்களையும் அறிந்து கூறுதல் முடியும். என்னதான் பரிகாரங்களை செய்தாலும், ஜனன கால கட்ட அமைப்பு மாறப்போவதில்லை, அதற்காக ஜாதகரே தனது நிலையை அறிந்து, உணர்ந்து தம்மை மாற்றிக்கொள்வதனாலேயே அவருக்குள் மாற்றம் தெரியவருமே அன்றி மற்றேதும் இல்லை. தம்மை உணருவதாலேயே அவருக்குள் ஏற்படும் மாற்றம் அத்தனை பிரச்னைகளுக்கும் எதிர்நின்று, சவால்விட்டு ஜெயித்தும் காண்பிக்க முடியும்.

ஒரு தசை / புத்தி என 2 முதல் 3 வருட காலத்திற்கு அல்லது ஒரு தசை முடிவடையும் வரை, எது குறைவான காலமோ அதற்கேற்றாற்போல் ஆய்வு செய்து நிச்சயம், கூறமுடியும். மொத்த பலன் என்பது இயலும். அதற்கு மிகவும் மெனக்கெடவும், சிரமப்படவும் வேண்டியதாய் இருக்கும். அத்துடன், ஒருவருக்கே பார்த்துக்கொண்டிருந்தால், எப்படி மற்றவர்களுக்கு பலன் சொல்ல முடியும். மிகுந்த பிரச்னை வந்தால், ஜோதிடரை நாடலாம், என எண்ணி, அத்தோடு ஜோதிடர்கள் கேட்கக்கூடிய அளவு, தட்சிணையைத் தரக்கூடிய நபர்களும் பலர் தற்போது இல்லை என்பதே சரியாகும். பொதுவாகவே, ஒரு சிலரைத் தவிர, அனைத்து ஜோதிடர்களும் தமது பங்களிப்புக்கு ஏற்ப தான் தக்ஷிணை கேட்பார்கள் என மட்டும் உறுதியாகக் கூறமுடியும்.

ஜோதிடம் பலிக்காமல் போவதும், அதற்கான கிரக நிலைகளும்:-

* நவக்கிரகங்களில் ஐந்து கிரகங்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது ஒரு பாவத்தில் நின்றால், அவர்களுக்கு ஜாதகம் பலிதமாகாது.

* ஐந்து அல்லது ஆறு கிரகங்கள் நீசம் பெற்று இருந்தால், வாழ்வில் பிச்சையெடுத்துக் கொண்டு, சாலை ஓரங்களில், சாக்கடை ஓரங்களில் வாழும் நிலை உண்டாகும். இத்தகைய அமைப்பு உள்ளவர்களுக்கும் ஜோதிடம் பலிக்காது.

* ஐந்து அல்லது ஆறு கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தாலும், ஜோதிடம் பலிக்காது.

* லக்னத்துக்கு பாதகாதிபதியின்  நட்சத்திர சாரத்தில் 5 அல்லது 6 கிரகங்கள் என்று இருந்தால் வாழ்வில் வறுமை நிலையே நீடிக்கும். இவர்களுக்கு ஜோதிடம் பலிக்காது.

* கேதுவுடன் நான்கு கிரகங்கள் சேர்ந்து, ராகுவுடன் மூன்று கிரகங்கள் சேர்ந்து இருந்தாலும் வாழ்வில் கஷ்டம் தவிர, சுகம் அனுபவிக்க முடியாத நிலையே உருவாகும். இவர்களுக்கும் ஜாதகம் சொன்னால் பலிதம் ஆகாது.

இவர்களுக்கு  நல்ல வாக்கு, நல்ல அறிவுரைகள் என எது சொன்னாலும் கேட்க மாட்டார்கள். ஏன், முறையான வசதி வாய்ப்புகளைச் செய்து கொடுத்தால்கூட பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.

* அஷ்டமி திதியில் பிறந்து, சூரியன்-சந்திரன்-குரு-செவ்வாய்-சனி ஆகிய ஐந்து கிரகங்கள் ஒரே பாவத்தில் நின்று இருந்தாலும், அல்லது இவர்கள் அனைவரும் ராகு கேது நட்சத்திர சாரம் பெற்றாலும், இவர்களுக்கு ஜோதிடம் பலிதம் ஆகாது.

அப்படிப்பட்டவர்களுக்கு என்ன பரிகாரம்? 

ஒவ்வொரு பிரதோஷ தினத்திலும் விரதம் இருந்து, சிவனை வழிபட்டால் மட்டுமே இவற்றிலிருந்து விடுபட முடியும். பிரதோஷ வழிபாடு சகல தோஷத்துக்கு வழிபாடாக இருக்கும்.

ஜோதிடத்தில் எல்லாவற்றையும் சொல்ல முடியுமா?

நிச்சயமாக, ஆணித்தரமாகச் சொல்லமுடியும். ஆனால் அதற்கு நிச்சயம் பிறப்பு குறிப்புகள் சரியாக இருத்தல் அவசியம். உதாரணமாக சிலவற்றைக் கீழே பார்ப்போம்.

1. நவாம்ச சக்கரத்தில், சனி அம்சமாகிய மகர, கும்பங்களில் ஒன்றில் சனி இருந்தாலும், அல்லது இராசியிலுள்ள சந்திரனை சனி பார்த்தாலும், பிரசவ அறை இருட்டாக இருக்கும். ஆனால் இக்காலத்தில், மேற்க்கூறப்பட்டவாறு அமைந்தாலும், அவசரக்கால விளக்குகள் அல்லது மாறுதிசை மின்னோட்டம் (INVERTER) பயன்படுத்தினாலும் அந்த அறையானது, இயற்கையிலேயே, நிச்சயம் இருள் கவ்வியதாக இருக்கும்.

2. குழந்தையின் பிறப்பின் நிலையை அறிய முடியும். எந்த லக்கினத்தில் குழந்தை பிறந்ததோ, அந்த லக்கினத்தின் தொடக்கத்தில் 10 பாகைக்குள் இருந்தால், அக்குழந்தையின் பிரசவ காலத்தில், எந்தவிதமான துன்பமும் இல்லாமல் பிறந்திருக்கும் எனலாம். அதே சமயம் அந்த லக்கினத்தின் 29-30 பாகைக்குள் குழந்தை பிறந்திருந்தால், அக்குழந்தை பிறக்கும் போது பிரசவம் கடினமானதாக இருக்கும்.

3. ஜென்ம லக்கினம் முதல் சந்திரன் இருக்கும் வீடு வரை எண்ணி அவற்றில் எத்தனை கோள்கள் இருக்கிறதோ அத்தனை பேர் பிரசவம் ஆகும் நேரத்தில் அருகில் இருப்பார்கள்.

4. லக்கினத்தை, நற்கோள்கள் பார்த்தால், தாய்க்கு எவ்வித துன்பமும் இன்றி குழந்தை பிறந்திருக்கும். அதேசமயம், லக்கினத்தை, சனி, செவ்வாய் பார்த்தால், தாய் துன்புற்றுக் குழந்தை பெற்றிருப்பாள் எனலாம்.

5. ஒரு குழந்தையின் ஜனன லக்கினத்திற்கும், சந்திரனுக்கும் இடையில் / நடுவில் சனி இருந்தாலும், பார்த்தாலும் தலை நரைத்துப்போன, கருத்த நிறத்துடையவள், தாய் பிரசவிக்கும் காலத்தில் அருகே இருப்பாள். அதே சமயம், செவ்வாய் இருந்தாலும், பார்த்தாலும், சிவப்பு நிறமான இளம் வயதுடைய விதவைப்பெண் அருகில் இருப்பாள்.

ஒருவர் பிறந்து ஜாதகம் பார்ப்பதற்கு 12 வருடங்களுக்குப் பிறகு பார்த்தால் தான் சரியாக இருக்கும். ஏனென்றால் 12 வயதில்தான் ஜனன கால ஜாதகத்தில் இருக்கும் குருவோடு கோச்சார குரு சேர்வார்.  (12 ராசிகளைக் கடந்து ஜனன கால குருவோடு, கோச்சார குரு சேர்வார்.) எனவே பனிரெண்டு வயதிலே தான் மிக முக்கியமான நிகழ்வுகள் நிகழும். அதற்கு முன்னதாக அவசியம் பார்க்க வேண்டுமானால், அந்த குழந்தை (ஜாதகர்), ஏதேனும் நோய்வாய்ப்பட்டிருந்தாலோ அல்லது பிரச்னை ஏதேனும் இருந்தாலோ, ஜாதகம் பார்க்கலாம். அது பாலாரிஷ்டம் சம்பந்தம் உள்ளதாக இருக்கக்கூடும்.

இவை அனைத்தும் ரிஷிகளால், கூறப்பட்டு அதற்கடுத்து வந்த ஜோதிட விற்பன்னர்களால் ஆய்வு செய்யப்பட்டு, நமது மனித சமுதாயத்திற்கு நலம் சேர்க்க வந்தவை என்றால், அது மிகை ஆகாது. இது போன்ற தகவல்கள், ஒருவரின் ஜாதகத்தைத் துல்லியமாக அறிந்து மேற்கொண்டு பலன் காண வழிவகுக்கும்.

பிரச்னையைத் தாங்கக் கூடிய திறன் உங்களுக்கு இருக்கிறதா?

உலகில் அனைவருக்கும் உள்ள மொத்த சர்வாஷ்டக பரல்கள் 337 மட்டுமே அதை 12 ஆல் (ராசிகளால்) வகுத்தால் சராசரியாக 28  வரும். சராசரிக்கும் மேலே கூடுதலாக இரண்டு பரல்களுடன் - அதாவது 30 பரல்கள் மூன்று வீடுகளில் (லக்கினம், 5 ஆம் வீடு, 9 ஆம் வீடு... )  - அல்லது ஒன்றிலாவது இருத்தல் நல்லது. அதோடு ஒரு கிரகத்தின் தனிப்பட்ட வலிமைக்குரிய பரல்கள் எட்டு. நான்கு என்பது சராசரி. 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் அந்த கிரகம் (அதிபதி) இருந்தால் நல்லது.

உதாரணம்

சிம்ம லக்கின ஜாதகனுக்கு, சூரியன்தான் லக்கின அதிபதி. ஜாதகத்தில் சூரியன் அதன் சுய வர்க்கத்தில் 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும். அதே சிம்ம லக்கின ஜாதகனுக்கு ஐந்தாம் வீடு, தனுசு வீடாகும், தனுசின் அதிபதி குரு பகவானும் 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும். அதே சிம்ம லக்கின ஜாதகனுக்கு ஒன்பதாம் வீடு, மேஷமாகும், மேஷத்தின் அதிபதி செவ்வாயும் 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு லக்கினக்காரர்களும் தங்களுக்குரிய லக்கினத்தை வைத்து அந்த மூன்று இடங்களையும் தாங்களே மதிப்பிட்டுக்கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு ஒரு வீடும், வீட்டின் அதிபதியும் அமைந்துவிட்டால் போதும். உங்களை ஒன்றும் சீண்ட முடியாது. எது வந்தாலும் தாங்கக்கூடிய உத்தம மனிதர் அல்லது பெண்மணி நீங்கள். அந்த கிரகங்கள் உங்களுக்குக் கடைசிவரை கை கொடுக்கும்!  

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன்

தொடர்புக்கு :  98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com