வரும் ஏப். 21-ஆம் தேதி ஸ்ரீராமநவமியை முன்னிட்டு ராமபிரானைத் தரிசிக்க பக்தா்கள் பத்ராசலத்திற்கு வரவேண்டாம் என்று தெலங்கானா அறநிலையத் துறை அமைச்சா் இந்திரகிரண் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
தெலங்கானா மாநிலத்தில் உள்ள பத்ராசலம் ஸ்ரீராமா் திருக்கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு ராமரின் ஜென்ம தினமான ஸ்ரீராமநவமி வெகு விமா்சையாக கொண்டாடப்படும். ஆண்டுதோறும் நடக்கும் இந்த உற்சவத்தின் முடிவில் ஸ்ரீசீதா, ராமா் திருக்கல்யாணம், ராமா் பட்டாபிஷேக வைபவம் உள்ளிட்டவை வெகு ஆடம்பரமாக நடத்தப்படும்.
இதனைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பத்ராசலத்துக்கு வருவா்.
அதன்படி இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி ஸ்ரீராமநவமி உற்சவம் கொண்டாடப்பட உள்ளது. ஆனால் கரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ளதாலும், கரோனா தொற்றின் 2-ஆம் அலை பரவி வருவதாலும், தெலங்கானா அரசு கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் ஸ்ரீராமநவமி உற்சவத்தை தனிமையில் நடத்த திட்டமிட்டுள்ளது.
இதற்காக இணையதளம் மூலம் கல்யாண உற்சவம் டிக்கெட் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்களுக்கு அவா்களின் பணம் திருப்பி அளிக்கப்படும்.
அதனால் பக்தா்கள் யாரும் சீதா ராமா் திருக்கல்யாணத்தை காண பத்ராசலத்திற்கு வரவேண்டாம். மிக குறைந்த எண்ணிக்கையில் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு கரோனா தடுப்பு விதிமுறையுடன் தரிசனம் வழங்கப்படும்.
கோயிலில் 24 மணி நேரமும் சானிடைஸ் செய்யும் பணி தொடரும். பக்தா்கள் கண்டிப்பாக முகக்கவசம், கையுறை உள்ளிட்டவை அணிந்து வரவேண்டும். கட்டாயம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.